காங். கொள்கைகளையே பாஜக பட்ஜெட் பிரதிபலிக்கிறது: ப.சிதம்பரம்
டெல்லி: நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கடந்த காங்கிரஸ் அரசு கடைபிடித்த கொள்கைகளே பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. செவ்வாய் கிழமை ரயில்வே பட்ஜெட்டும் நேற்று முன்தினம் பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், மோடி அரசின் முதல் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார். .
இந்நிலையில் நேற்றைய பட்ஜெட் தாக்கல் குறித்து பலதரப்பட்ட கருத்துக்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.
காங்கிரசின் கொள்கைகளை பிரதிபலிக்கிறது :
அந்தவகையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ‘தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய பட்ஜெட்டில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைபிடித்த கொள்கைகளையே மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பிரதிபலித்திருக்கிறார். ஏற்கனவே, இடைக்கால பட்ஜெட்டில் காங்கிரஸ் அரசு அறிவித்த அம்சங்களை அருண் ஜெட்லி தற்போது அறிவித்திருக்கிறார். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள பல திட்டங்களும் புதிய அறிவிப்புகளாக வெளிவந்துள்ளன.
பொருளாதார சீர்திருத்தங்களில் கடந்த ஆண்டு நம்பிக்கையிழந்து இருந்த பா.ஜ.க., தற்போது தனது நிலையை மாற்றி அன்னிய நேரடி முதலீடுக்கான உச்சவரம்புகளை அதிகரித்திருக்கிறது. உற்பத்தி துறைக்கான எந்த கொள்கை அறிக்கையும் பட்ஜெட்டில் இல்லை. அதேபோல், உணவு பாதுகாப்பு சட்டம் பற்றிய குறிப்பும் இல்லை.
வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரித்திருப்பதன் மூலம் ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாயை அரசு இழக்க வேண்டி இருக்கும். அதேசமயம் கூடுதல் உற்பத்தி வரி விதிப்பு மூலம் 7 ஆயிரம் கோடி ரூபாயை ஈடுகட்டலாம்'' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அன்னிய நேரடி முதலீட்டுக்கான பட்ஜெட் :
இதேபோல், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை அன்னிய நேரடி முதலீட்டுக்கான பட்ஜெட் என குற்றம் சாட்டியுள்ளார் மேங்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டில், தொலைநோக்கு பார்வையோ, இலக்கோ, செயலோ இல்லை. இது, வளர்ச்சியை ஊக்குவிக்காது.
ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் ஆகிய 2 பட்ஜெட்கள் மூலம், அன்னிய நேரடி முதலீட்டுக்காகவும், அன்னிய நேரடி முதலீட்டால் ஆளப்படும் அரசு பா.ஜ.க. என்பது தெளிவாகி விட்டது. மேலும், இந்த பட்ஜெட்டில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளது'' என இவ்வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பட்ஜெட்டில் மக்கள் விரோதக் கொள்கைகள் :
இதேபோல், நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெ ட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘காங்கிரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை தீவிரப்படுத்தும் இந்த பட்ஜெட்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்திய பா.ஜ.க அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட் பல அபாயகரமான அம்சங்களைக் கொண்டுள்ளது. ஏற்கனவே ரயில்வே பயணிகள் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணத்தை உயர்த்தி சாதாரண மக்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுத்த பா.ஜ.க. அரசு கேந்திரமான ரயில்வே துறையில் அன்னிய நேரடி மூலதனத்தை அனுமதிக்கப் போவதாக அறிவித்தது. தற்போது பொது பட்ஜெட்டில் அன்னிய மூலதனத்தை பரவலாக அனுமதிப்பதை தனது கொள்கையாக பிரகடனம் செய்துள்ளது. பாதுகாப்புத் துறையில் 49 சதவிகிதம், இன்சூரன்ஸ் துறையில் 49 சதவிகிதம் அன்னிய மூலதனத்தை அனுமதிக்கப் போவதாக அறிவித்துள்ள மத்திய அரசு இன்னும் பல்வேறு கேந்திரமான துறைகளிலும் அந்நிய நேரடி மூலதனம் அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் தரக்கூடிய உணவு மற்றும் எரிபொருள் மானியம் குறித்து மறுபரிசீலனை செய்யப் போவதாகவும் ஒட்டுமொத்த மானியங்களையும் ஒழுங்குபடுத்தப் போவதாகவும் கூறியுள்ளது. புதிய உரக் கொள்கையை வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளது. அரசின் வருமானத்தை மீறி செலவிட முடியாது என தெரிவித்துள்ளதன் மூலம் மேலும் பல தாக்குதல்களை சந்திக்க மக்கள் தயாராக இருக்கும்படி சொல்லாமல் சொல்லியுள்ளது பா.ஜ.க. அரசு.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் மக்கள் நலனை புறக்கணித்து கடந்த 10 ஆண்டுகளில் கடைப்பிடித்த அந்நிய முதலாளிகளுக்கு வாரி வழங்கும் அதே கொள்கைகளை அச்சரம் பிசகாமல் அதேசமயம் தீவிரமாக அமல்படுத்த முனைந்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாய நெருக்கடி, தொழில் மந்தம் ஆகியவை கடந்த 10 ஆண்டுகள் அனுபவமாக இருந்தது. இந்த வாழ்வாதாரப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு எந்த உருப்படியான திட்டங்களும் இல்லாததோடு இந்தப் பிரச்னைகளை தீவிரப்படுத்தும் கொள்கைகளும், நடவடிக்கைகளுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் பட்ஜெட் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, தேசத்தின் பொருளாதார கட்டமைப்பையும், சுயசார்புத் தன்மையையும் பெருமளவில் பாதிக்கச் செய்யும். காங்கிரஸ் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளைச் சாடி அதிகாரத்திற்கு வந்த பா.ஜ.க. அதே கொள்கையை இன்னும் தீவிரமாக அமல்படுத்த முனைந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு மத்திய பா.ஜ.க. அரசின் இத்தகைய மக்கள் விரோத, தேச விரோத பட்ஜெட்டை வன்மையாகக் கண்டிக்கிறது. பா.ஜ.க. அரசின் அபாயகரமான கொள்கையை எதிர்த்து முறியடிக்க ஒன்றுபட்டுச் செயலாற்றுமாறு அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.