ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம்.. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 16வது நாளாக முடங்கியது ராஜ்யசபா
ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்ய சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டு பிரச்சனையை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்ய சபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத என அறிவித்தார். இதையடுத்து நாட்டில் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மோடியின் இந்த திடீர் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள்முதல் ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப்பெறக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டத்தொடர் தொடங்கி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ராஜ்ய சபாவில் முழக்கமிட்டன. இதில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து பகல் 12 மணி வரை ராஜ்ய சபா ஒத்திவைக்கப்படுவதாக குடியரசு துனை தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்தார். பின்னர், 12 மணிக்குப் பிறகு ராஜ்யசபா மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் அவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 3 மணிக்கு ராஜ்ய சபா மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. குளிர்காலக் கூட்டத் தொடரில் ராஜ்ய சபா 16வது நாளாக இன்றும் முடக்கப்பட்டுள்ளது.