"பெண் சிசுக் கொலை"யை ஆதரிக்கும் ராம்தேவின் "ஆண் குழந்தை" மருந்து.. ராஜ்யசபாவில் கொந்தளிப்பு!
டெல்லி: "ஆண்குழந்தை பிறப்பதற்காக" என யோகா குரு பாபா ராம்தேவ் தமது மருந்தகங்களில் மருந்து விற்பனை செய்வது சட்டவிரோதம்.. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியதால் கடும் அமளி ஏற்பட்டது.
நாடாளுமன்ற ராஜ்யசபா இன்று காலை கூடிய போது ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.பி. கே.சி. தியாகி எழுந்து "ஆண் குழந்தை பிறப்பதற்காக" என்று எழுதப்பட்டிருந்த ஒரு பாக்கெட்டை எடுத்து காண்பித்தார். திவ்யா பார்மசியில் இதை வாங்கியதாகவும் இந்த மருந்தை வாங்கினால் கண்டிப்பாக ஆண்குழந்தை பிறக்கும் என்று மருந்தக பணியாளர்கள் கூறியதாவும் தெரிவித்தார் கே.சி. தியாகி.
இம்மருந்தை தாம் ஏப்ரல் 14-ந் தேதி வாங்கியதற்கான ஆதாரங்களையும் சபையில் காண்பித்த கையோடு, ஹரியானாவில் ஆளும் பாரதிய ஜனதாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நபர் (ராம்தேவ் பெயரை குறிப்பிடாமல்) இத்தகைய மருந்துகளை விற்பனை சட்டவிரோதமானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது; அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்துடன், நல்ல ஆளுமையுள்ள பிரதமரின் தலைமையில் இந்த அரசு செயல்படுகிறது எனில் இத்தகைய நடவடிக்கைகளை அங்கீகரிக்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து அமளி ஏற்பட்டது.
அப்போது சமாஜ்வாடி எம்.பி. ஜெயா பச்சன் எழுந்து அந்த பாக்கெட்டை வாங்கி சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவிடம் கொடுத்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து இத்தகைய மருந்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது சபை தலைவராக இருந்த துணைத் தலைவர் பி.ஜே. குரியன், மருந்துகள் மூலம் பாலினத்தைத் தேர்வு செய்வது என்பது சட்டத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானதுதான்.. ஆனால் இதுபற்றி எதுவும் தெரியவில்லை என்றார்.
இருப்பினும் ராம்தேவ் பெயரைக் குறிப்பிட்டு அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா, பாலின விகிதாசாரம் தொடர்பாக அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. பிரதமரைப் பொறுத்தவரையில் பெண்கள் பாதுகாப்பு, மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு உள்ளவர்.. இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
ஆனால் இதில் திருப்தி அடையாத கே.சி. தியாகி, மேலும் பல மருந்து பாக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.. அப்போது நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தியாகியிடம் எத்தனை பாக்கெட்டுகள் வைத்துள்ளீர்கள் என்றார்.
ஜெயா பச்சன் எம்.பி.யோ, இந்த மருந்துகளை அனைத்து கடைகளில் இருந்தும் பறிமுதல் செய்வதுடன் அந்த மருந்தகங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த மருந்துகளை பறிமுதல் செய்கிறோம்; மருந்தகங்களின் உரிமத்தை ரத்து செய்வோம் என ஏன் அரசு சொல்ல மறுக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், ஹரியானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பாலின விகிதாச்சாரம் கவலைக்குரியதாக இருக்கிறது. இதனால் இத்தகைய மருந்துகளை தடை செய்ய வேண்டும்; இத்தகைய மருந்துகளை விற்பனை செய்வதற்கு பின்னணியாக இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
இதேபோல் திரிணாமுல் எம்.பி. சுகேந்து சேகர் ராயும், இத்தகைய மருந்து விற்பனையை உடனடியாக தடை செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
பாபா ராம்தேவ் தமது பதஞ்சலி யோகா மையங்கள் மூலம் இயற்கை மூலிகை மருந்துகளை தயாரித்து பல நூறு கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் செய்து வருகிறார். இத்தகைய மருந்துகளில் ஆண்குழந்தைகளை பிறக்க வைக்க முடியும் என்று கூறி சில மருந்துகள் விற்கப்பட்டுள்ளன. இதுதான் இப்போது அம்பலத்துக்கு வந்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.