கொல்கத்தாவில் கூடும் எதிர்க்கட்சிகள்.. பாஜகவுக்கு மரண அடியாக அமையும்.. மமதா கடும் எச்சரிக்கை
Recommended Video
கொல்கத்தா: கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ள பிரமாண்ட எதிர்க்கட்சிக் கூட்டம் பாஜகவுக்கு மரண அடியாக அமையும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டு வருகின்றன. தேசிய அளவில் திரட்டப்பட்டு வரும் கூட்டணி தவிர்த்து மாநில அளவிலும் பிராந்திய அளவில் வலுவான கட்சிகளின் கூட்டணிகளும் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.
2019 லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது என்ற நிலையில் பாஜகவும் தனது உத்திகளை மெல்ல மெல்ல அவிழ்த்து விட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நாளை கொல்கத்தாவில் பிரமாண்ட எதிர்க்கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரிகேட் மைதானத்தில்
கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் இந்த பிரமாண்டக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் திமுக, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் என அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஸ்டாலின் பங்கேற்கிறார்
இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். முன்பெல்லாம் கருணாநிதி இருந்தவரை திமுக தலைவர் சார்பில் யாரேனும் முக்கியத் தலைவர்கள்தான் பங்கேற்பார்கள். ஆனால் இப்போது ஸ்டாலின் தலைவரான பின்னர் அவரே நேரடியாக, தமிழகம் தாண்டிய கூட்டணி நிகழ்வுகளுக்கு அவரே நேரில் வர ஆரம்பித்து விட்டார்.
தலைவர்கள் வருகை
காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே வருகிறார். சோனியா ராகுல் ஆகியோர் வரவில்லை. பகுஜன் சமாஜ் சார்பில் மாயாவதி, சமாஜ்வாடி சார்பில் அகிலேஷ் யாதவ், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் சரத் யாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மரண அடி கிடைக்கும்
இந்த கூட்டம் குறித்து மமதா பானர்ஜி கூறுகையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாஜக அல்லாத கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். இது பாஜகவுக்கு மரண அடியைத் தரும். லோக்சபா தேர்தலில் பாஜகவின் கடைசி அத்தியாயத்தை எழுதப் போகும் முன்னுரையாக இது அமையும்.
பிராந்திய கட்சிகளின் எழுச்சி
வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவால் 125 தொகுதிகளைக் கூட தாண்ட முடியாது. மாநில கட்சிகள் பாஜகவை விட அதிக இடங்களில் வென்று ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் என்றார் மமதா பானர்ஜி.