வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு…ம.பி யில் சிஆர்பிஎப் - போலீஸ் மோதல்
கோபால்: மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டபோது, துணை ராணுவப் படையினருக்கும், மாநில போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வருமான வரி சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி மறுத்து, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, துணை ராணுவ படையினருக்கும், மாநில போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் அது போன்ற ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு அதிகாரி பிரவீன் கக்கருக்குச் சொந்தமாக இந்தூர் மற்றும் போபாலில் உள்ள வீடுகளில் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர். இதேபோல், கமல்நாத்தின் உதவியாளர் மிக்லானியின் மகன்களின் இல்லங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது.
டெல்லி, கோவா, ம.பியில் 60 இடங்களில் ஐடி ரெய்டு.. ம.பி முதல்வர் கமல்நாத் உதவியாளர் வீட்டிலும் சோதனை
மேலும், கோவா மற்றும் டெல்லியில் உள்ள அமீரா குழுமம், மோசர் பேயர் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். டெல்லியில் மட்டும் 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டதாகவும், கணக்கில் வராத ரொக்கம் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் கமல்நாத்தின் உதவியாளர் வீட்டில் இருந்து கணக்கில் வராத 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதனிடையே, இந்த சோதனை பிரதமர் நரேந்திர மோடியின் பழிவாங்கும் நடவடிக்கை என அம்மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான, மனாக் அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தொல்லை கொடுப்பதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என நரேந்திர மோடி கருதுவதாக விமர்சித்தார். தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமரானதும், பாஜக தலைவர் அமித் ஷாவின் வீட்டில் சோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.