காஷ்மீர் பிரச்சனையை பீகாரில் அட்டகாசமாக கோர்த்துவிட்டு பிரதமர் மோடி அசால்ட் பிரசாரம்!
சசராம்: ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பீகார் தேர்தல் களத்தில் அந்த மாநிலத்துக்கான பிரச்சனையாக மடைமாற்றி பிரதமர் மோடி பிரசாரம் செய்தது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக மவுனம் காத்த பாஜக இப்போது பீகார் தேர்தல் களத்தில் நின்று பதிலடி தந்து வருகிறது.
பீகாரின் சசராம் என்ற இடத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
உலகத்திலேயே எந்த கட்சியும் யோசிக்காத வாக்குறுதி.. பீகாரில் பாஜக அதகளம்.. அடுக்கடுக்காக கேள்விகள்
10 ஆண்டுகளை வீணாக்கிய காங்கிரஸ்
குஜராத் முதல்வராக நான் இருந்த போது பீகார் முதல்வராக நிதிஷ்குமாருடன் மத்திய அரசு ஏற்பாடு செய்த கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் பீகாரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் என்பதே நிதிஷ்குமாரின் வேண்டுகோளாக இருந்தது. நிதிஷ்குமாரின் 10 ஆண்டுகால ஆட்சியை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வீணாக்கிவிட்டது.
ஆர்ஜேடி மீது அட்டாக்
பீகாரில் ஒரு காலத்தில் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்த மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழ்நிலை இருந்தது. இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை மக்கள் மறந்துவிட கூடாது. அவர்கள் இப்போது உங்களிடம் மீண்டும் வாக்கு கேட்டு வருகின்றனர். கவனமாக இருங்கள்.
ஜம்மு காஷ்மீர் 370வது பிரிவு
ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை மத்திய அரசு நீக்கியது. இப்போது ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. ஜம்மு காஷ்மீரில் எல்லையை பாதுகாக்க பீகார் மக்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளை அனுப்பியிருக்கிறீர்கள். இப்போது 370வது பிரிவை அமல்படுத்துங்கள் என்று எதிர்க்கட்சிகள் கோருவது பீகார் மக்களை அவமதிப்பது இல்லையா? இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பாஸ்வானுக்கு அஞ்சலி
முன்னதாக மறைந்த லோக் ஜனசக்தித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், ஆர்ஜேடியில் இருந்து விலகிய நிலையில் காலமான மூத்த தலைவர் ரகுவன்ஸ் பிரசாத் ஆகியோருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தினார். பீகார் தேர்தலில் ஜேடியூ-பாஜக அணியில் லோக்ஜனசக்தி இல்லை. ஆனால் பாஜகவுடன் லோக் ஜனசக்தி நெருக்கமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.