அந்த 'மோடி ஆப்' மேல எங்களுக்கு நம்பிக்கையே இல்ல! - எதிர்க்கட்சிகள்
டெல்லி: உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது குறித்து 'நரேந்திர மோடி செயலி' (ஆப்) வாயிலாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு நம்பகத் தன்மையற்றது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
செவ்வாய்க்கிழமை காலை 10 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 10 மணி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் 5 லட்சம் பேர் பங்கேற்று, தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததாகவும், அதில் 93 சதவீதம் பேர் அரசின் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை மிக மோசமானது என்று 2 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளதாகவும் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்ப இணையப் பக்கத்தில் அறிவித்திருந்தனர்.
ஆனால் இந்த கருத்துக் கணிப்பின் நம்பகத் தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
இது சந்தேகத்துக்கிடமானது என்றும், மோடியின் ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்ற சர்வே என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது:
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள், முதலில் பிரதமர் மோடிக்காகவே மத்திய அரசை ஆதரித்திருக்கிறார்கள். இரண்டாவது, கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளிக்கும் வகையிலேயே உள்ளது.
மூன்றாவது, கிராமப் புறங்களைச் சேர்ந்த மக்கள் யாருமே இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றிருக்க வாய்ப்பில்லை. 5 லட்சம் பேர் 24 மணி நேரத்தில் இந்த செயலியை தரவிறக்கம் செய்தனர் என்ற புள்ளி விபரமே சந்தேகத்துக்குரியதாக உள்ளது," என்றார் அவர்.