மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கவே டெல்லியில் ஓபிஎஸ் முகாம்.. பரபர பின்னணி
மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும் என பிரதமர் மோடியிடம் ஓபிஎஸ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
டெல்லி: ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கவே டெல்லியில் அதிமுக ஓபிஎஸ் கோஷ்டி முகாமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் பாஜகவின் துணை அமைப்புகளாகிவிட்டன. பாஜக மேலிடம் என்னவெல்லாம் நினைக்கிறதோ அதை கச்சிதமாக செய்து முடிப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன இந்த கோஷ்டிகள்.
மோடியுடன் சந்திப்பு
நாட்டின் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு நிகழ்ச்சியை முன்வைத்து இப்போது டெல்லியில் இரு கோஷ்டிகளும் முகாமிட்டுள்ளன. ஓபிஎஸ் கோஷ்டி நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியது.
அமைச்சர் பதவி வேண்டுகோள்
இச்சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் மோடியை ஓபிஎஸ்ஸும் மைத்ரேயனும் தனியே சந்தித்து பேசியுள்ளனர். இதில், மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் மைத்ரேயனுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மைத்ரேயன் டெல்லி லாபி
பாஜகவை தொடர்ந்து ஆதரித்து வரும் தங்களுக்கு இது ஒரு அங்கீகாரம் தருவதாக இருக்கும் எனவும் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மைத்ரேயன் ஏற்கனவே டெல்லியில் தீவிரமான லாபியில் ஈடுபட்டு வருகிறாராம்.
எடப்பாடி கோஷ்டி அதிர்ச்சி
முறைப்படி ஓபிஎஸ்ஸை அழைத்து கோரிக்கை வைத்தும் பார்க்கலாம் என்பதால் பிரதமர் மோடியை இருவரும் தனிப்பட்ட முறையிலும் சந்தித்து பேசியிருக்கின்றனர். இத்தகவலால் எடப்பாடி கோஷ்டி அதிர்ச்சியடைந்துள்ளதாம்.