"எந்த தலையீடும்" இல்லாமல் நீதித்துறை செயல்பட வேண்டும்: டெல்லியில் ஓ.பி.எஸ். வலியுறுத்தல்!!
டெல்லியில் முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்ற மாநாடு இன்று நடைபெற்றது. மத்திய சட்டத்துறை அமைச்சகம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடுகளை செய்திருந்தது.
சட்டத்துறை எதிர்கொள்ளும் நிர்வாக பிரச்சினைகள், வழக்கு தேக்கம் மற்றும் அவற்றை விரைவில் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் நீதித்துறை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இம் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது
ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசு, ஏழை - எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்ய முதன்மையான முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
நடப்பு நிதியாண்டில் நீதித்துறைக்கென ரூ.809.7 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நீதித்துறையின் கட்டிடப் பணிகள், பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.375 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த 2012-2013 ஆம் ஆண்டில் சிவில் நீதிமன்றங்களின் தேவைகளை பொறுத்து 178 நீதிபதிகளை தமிழக அரசு தேர்வு செய்து பணியமர்த்தியுள்ளது. மேலும் 162 சிவில் நீதிபதிகளை நியமிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், துணை நீதிமன்றங்களுக்காக 35 நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தமிழக அரசு தேசிய நீதிமன்ற நிர்வாக அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. அவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளதோடு, தேவையான உதவியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீதித்துறை உள்கட்டமைப்புக்கான நிதியை மத்திய அரசு தொடர்ந்து வழங்கினால், 2017-ம் ஆண்டுக்குள் அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டடத்தில் இயங்கும் நிலை ஏற்படும்.
மகளிருக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து தீர்க்க, தேவையான எண்ணிக்கையில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விரைவானதும் சரியானதுமான நீதியை வழங்குவதைவே நீதித்துறை குறிக்கோளாக கொள்ள வேண்டும். நீதித்துறைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தினால் மட்டுமே அதன் சுதந்திரத்தை உறுதிசெய்ய முடியும்.
ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறபடி, தமிழக நீதிமன்றங்களில் தமிழை அங்கீகரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மாநில அலுவல் மொழியை உயர் நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகள் மற்றும் விசாரணைகளின்போது பயன்படுத்த அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்திருக்கிறது. எனவே, தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்.
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்ற முந்தைய நிலைப்பாட்டை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.