ஆர்கே நகரில் தினகரனின் 'ஜரூர் பணப்பட்டுவாடா'- தலைமை தேர்தல் ஆணையரிடம் ஓபிஎஸ் அணி நேரில் புகார்
டெல்லியில் தேர்தல் தலைமை ஆணையரை ஓபிஎஸ் அணியினர் நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.
டெல்லி: டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரை ஓபிஎஸ் அணியினர் இன்று திடீரென சந்தித்தனர். அப்போது ஆர்கே.நகரில் டிடிவி.தினகரனின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணப்படுவாடா செய்வதாக அவர்கள் புகார் அளித்தனர்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். தினகரனும் அவரது ஆதரவாளர்களும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு வாக்குக்கு பணம் வழங்குவதாக ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சியை சேர்ந்த ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன்,கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்தனர். அப்போது டிடிவி. தினகரனின் ஆதரவாளர்கள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு சரமாரியாக பணம் பட்டுவாடா செய்வதாக அவர்கள் புகார் மனு அளித்தனர்.
இதனை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு அளித்த புகாரால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தேர்தல் ஆணையரை சந்தித்து அவர்கள் நேரில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.