'ஈரோடு கிழக்கு தேர்தல் பரபரப்பு’ குஜராத்தில் ஓபிஎஸ்க்கு கிடைத்த உற்சாக வரவேற்பு.. அடுத்த மூவ் என்ன?
அகமதாபாத்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் குஜராத்திற்கு சென்றுள்ளார். தமிழ் சங்கம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள சென்ற ஓ பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் அறிவித்துள்ள நிலையில், அவரது இந்த குஜராத் பயணம் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
குஜராத்தில் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கர்ணாவதி தமிழ் சங்கம் சார்பில் 6-வது பொங்கல் திருவிழா, மணிநகர் தொகுதியில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் முன்னாள் முதலவர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவருடன் பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தேவையில்லாத பில்டப்.. பாஜக அலுவலகத்தில் காத்திருந்தது ஏன்? ஜெயக்குமார் விளக்கம்
கும்மி அடித்தல், கலை நிகழ்ச்சிகள்
குத்து விளக்கு ஏற்றி பொங்கல் விழாவை ஓபிஎஸ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மணிநகர் தொகுதியை சேர்ந்த ஏராளமான தமிழர்களும் குடும்பத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முதல் கட்டமாக பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மாடுகள் வழிபாடு நிகழ்ச்சி, கும்மி அடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது.
குஜராத் வாழ் தமிழர்களுடன்
தமிழ் மாணவ - மாணவிகள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழர் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை ஓ பன்னீர் செல்வம் உள்பட சிறப்பு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து குஜராத் வாழ் தமிழர்களுடன் ஓ பன்னீர்செல்வம் கலந்துரையாடினார். குஜராத்தில் உள்ள மணிநகர் தொகுதியில் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் மணிநகர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2 முறை போட்டியிட்டு வென்ற தொகுதியும் ஆகும்.
பாஜக வேட்பாளரை நிறுத்துமா?
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பினர் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதேவேளையில் பாஜக போட்டியிட விரும்பினால், அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இருந்தாலும் பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. பாஜக தனியாக வேட்பாளரை நிறுத்துமா? அல்லது ஆதரவை அளிக்குமா? என்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
அடுத்த மூவ் என்ன?
காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கி விட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் தரப்பில் இன்னும் தெளிவான ஒரு நிலை எட்டவில்லை. இத்தகைய சூழலில் தான் ஓபிஎஸ் குஜராத் சென்றுள்ளார். அங்கு பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து, இடைத்தேர்தலில் ஆதரவு கோர இருப்பதாகக் கூறப்படுகிறது. அகமதாபாத்தில் தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க ஓபிஎஸ் செல்வதாக கூறப்பட்டாலும், பிரதான நோக்கம், பாஜக தலைவர்களைச் சந்திப்பதுதான் எனக் கூறப்படுகிறது.
போட்டி போட்டு சந்திப்பு
அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரைச் சந்தித்து ஆதரவு கோரினர். அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆதரவு கோரினர். நேற்று 4 மணியளவில் ஓபிஎஸ் தரப்பினர் அண்ணாமலையைச் சந்தித்த நிலையில், அதற்கு சற்று முன்னதாக ஜெயக்குமார் உள்ளிட்ட ஈபிஎஸ் அணியினர் சந்தித்துப் பேசினர். இப்படி தொடர்ச்சியாக கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியிருக்கிறது.