தப்பு, தப்பு.. தேசிய குடிமக்கள் பதிவேடு சரியில்லை.. வழக்கு தொடர்ந்த அமைப்பே அதிருப்தி
கவுகாத்தி: 2009 ஆம் ஆண்டில், அஸ்ஸாமின் வாக்காளர் பட்டியலில் இருந்து 41 லட்சம் வெளிநாட்டினரின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், தேசிய குடிமக்கள் பதிவை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, அசாம் பொது பணிகள் (APW) என்ற தன்னார்வ அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக, என்.ஆர்.சி புதுப்பிக்கப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது.
ஆனால், 2013 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அசாம் பொது பணிகள் மனு மீது தீவிரம் காட்டியது. என்ஆர்சியைப் புதுப்பிப்பதற்கான செயல்முறையைத் தொடங்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வழியாக இந்த பணி தொடங்கியது.
இன்று அசாம் தேசிய குடிமக்கள் பதிவு இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்கு தொடர்ந்த அசாம் பொது பணிகள் அமைப்பு, இதை "குறைபாடுள்ள ஆவணம்" என்று அழைத்துள்ளது. வரைவு பட்டியலில் தவறு இருந்ததாக குற்றம்சாட்டியபோதிலும், உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது என்று இந்த அமைப்பு சுட்டிக் காட்டுகிறது.
தேசிய குடிமக்கள் பட்டியலில் விடுபட்டவர்களின் நிலை என்ன?.. கவலையில் 19 லட்சம் மக்கள்!
சட்டவிரோத குடியேற்றம் பிரச்சினை அசாமில் ஒருபோதும் தீர்க்கப்படாது என்பதை இறுதி என்.ஆர்.சி தெளிவுபடுத்தியுள்ளது. இது குறைபாடற்ற முறையில் முடிக்கப்பட்டிருந்தால், அசாமின் வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயமாக இருந்திருக்கும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு புதுப்பித்தல் பணிகளில் பயன்படுத்தப்படும் மென்பொருளானது இவ்வளவு அதிக டேட்டாக்களை கையாளக்கூடியதா என்று சந்தேகம் உள்ளது. இது எந்த மூன்றாம் தரப்பு தகவல் தொழில்நுட்ப நிபுணரால் பரிசோதிக்கப்பட்டது? இவ்வாறு அடுக்கடுக்காக கேள்வி எழுப்புகிறார், வழக்கு தொடர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் ஆபிஜீத் சர்மா.