முன்னாள் ராணுவத்தினருக்கான 'ஒரே பதவி.. ஒரே ஓய்வூதியம்' விவகாரம்... மத்திய அரசு இன்று முக்கிய முடிவு?
டெல்லி: முன்னாள் ராணுவத்தினரின் பிரதான கோரிக்கையான 'ஒரே பதவி... ஒரே ஓய்வூதிய' விவகாரத்தில் மத்திய அரசு இன்று முக்கிய முடிவை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ராணுவ வீரர்கள் ஓய்வுபெறும்போது அவர்கள் கடைசியாக வகித்த பதவியின் அடிப்படையில் ஒரே மாதிரியான ஓய்வூதியத்தை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கை.
பிரதமர் நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையிலும் இப்படி ஒரு கோரிக்கை எழுந்துள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார். அதாவது 2005ஆம் ஆண்டு கர்னல் நிலையில் உள்ள ராணுவ வீரர் ஒருவர் ஓய்வு பெறுகிறார்; 2015ஆம் ஆண்டு கர்னல் நிலையிலான மற்றொரு ராணுவ வீரர் ஓய்வு பெறுகிறார். 2005ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவரின் ஓய்வூதியமானது 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவரின் ஓய்வூதியத்தை ஒப்பிடுகையில் குறைவாகவே இருக்கிறது என்பது சர்ச்சை.
ஆகையால் அனைத்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் இன்று ஓய்வு பெறும் கர்னல் பெறுகிற அதே ஓய்வூதியத்தைப் பெறும் வகையில் ஆண்டுதோறும் மாற்றி அமைக்க வேண்டும் என்பது கோரிக்கை.
If this is true, I support stand of @narendramodi sarkar on #OROP. pic.twitter.com/rGtUXz5Gbs
— Rahul Kaushik (@kaushkrahul) August 28, 2015
இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் கடந்த 2 வாரங்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஓய்வுபெற்ற ராணுவத்தினர் நடத்தி வருகின்றனர். ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் கடந்த புதன்கிழமையன்று ஓய்வு பெற்ற ராணுவத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அரசுத் தரப்பைப் பொறுத்தவரை, அரசு ஊழியர்களுக்கு பொதுவாக 10 ஆண்டுக்கு ஒரு முறை ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படுகிறது. முன்னாள் ராணுவ வீரர்களோ ஆண்டுதோறும் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்கின்றனர். இந்த கோரிக்கை ஏற்புடையது அல்ல; இருப்பினும் அவர்களது ஓய்வூதியத்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்கிறது.
அதே போல், ஒரே பதவி- ஒரே ஓய்வூதியத் திட்டத்தை ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு எது என்பதும் எந்த ஆண்டு முதல் இதனை நடைமுறைப்படுத்துவது என்பதிலும் அரசுத் தரப்புக்கும் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
1965ஆம் ஆண்டு பாகிஸ்தானை போரில் வென்ற 50ஆவது தினமான இன்றாவது தங்களது கோரிக்கைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கெடு விதித்துள்ளனர். ஆனால் நேற்று அரசுக்கும் ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் இன்றைய 50ஆம் ஆண்டு வெற்றி விழா நிகழ்வுகளை முன்னாள் ராணுவத்தினர் புறக்கணித்துள்ளனர்.
இதனால் ஒரே பதவி- ஒரே ஓய்வூதியம் தொடர்பான முக்கியமான அறிவிப்பை இன்றாவது மத்திய அரசு வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.