ஒரே பதவி...ஒரே ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும்: அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறிவிப்பு
டெல்லி: முன்னாள் ராணுவத்தினரின் நீண்டகால கோரிக்கையான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியத் தொகை மாற்றி அமைக்கப்படும் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று அறிவித்துள்ளார்.
ஒரே பதவி வகித்த போதும் வெவ்வேறு கால கட்டங்களில் ஓய்வு பெறுகிற முன்னாள் ராணுவத்தினருக்கான ஓய்வூதியம் வேறுபாடுடன் இருக்கிறது; இதைக் களைய வேண்டும் என்பது முன்னாள் ராணுவத்தினரின் நீண்டகால கோரிக்கை.
இந்த கோரிக்கையை கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போதைய மோடி அரசு பதவியேற்றது முதலே ஒரே பதவி....ஒரே ஓய்வூதியக் கோரிக்கையை முன்னாள் ராணுவத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இந்தப் போராட்டத்தை அவர்கள் தீவிரமாக முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் இக்கோரிக்கையை வலியுறுத்தி 82 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னாள் ராணுவத்தினர் நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து முன்னாள் ராணுவத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், ஒரே பதவி... ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ10 ஆயிரம் கோடி முதல் ரூ12 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியத் தொகை மாற்றிய் அமைக்கப்படும். இத்திட்டம் 2014ஆம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் கணக்கிட்டு செயல்படுத்தப்படும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும்.
The Government has accepted #OROP in true spirit without being constrained by previous inaccurate estimates, says Defence Minister
— PIB India (@PIB_India) September 5, 2015
2013-ல் வழங்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் வழங்கப்படும். விருப்ப ஓய்வு பெற்றோர் இத்திட்டத்தின் கீழ் பலனடைய முடியாது. இத்திட்டம் குறித்து 6 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஒருநபர் குழு அமைக்கப்படும் என்றார்.
முன்னாள் ராணுவத்தினர் அதிருப்தி
முன்னாள் ராணுவத்தினர் இந்த அறிவிப்பை வரவேற்ற போதும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ஒரே பதவி... ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்துவது என்ற அரசின் முடிவை வரவேற்கிறோம். ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைப்பதை ஏற்க முடியாது;
ஆண்டுதோறும் மாற்றியமைக்க வேண்டும். அதேபோல் இத்திட்டம் குறித்து ஆராய ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளதையும் ஏற்க முடியாது. 5 நபர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.