பழைய ரூபாய் நோட்டுகள் ரூ96 ஆயிரத்தை மாற்றித் தர மோடிக்கு கோரிக்கை விடுத்த ஆதரவற்ற சிறுவன்
ராஜஸ்தான்: ரிசர்வ் வங்கி மறுத்ததால் 96 ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுக்களை மாற்றித்தரும்படி பெற்றோர்களை இழந்த சிறுவன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளான்.
ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் சரவாடா அருகே உள்ள ஆர்.கே. புரத்தில் ராஜூ- பூஜா பஞ்சாரா என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 16 வயதில் (தற்போது) ஒரு மகனும், 12 வயதில் (தற்போது) ஒரு மகளும் இருந்தனர்.
ராஜூ ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இரு குழந்தைகளுடன் பூஜா வாழ்ந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு பூஜா கொலை செய்யப்பட்டார். அப்போது அந்த பையனுக்கு 12 வயதும், அந்த சிறுமிக்கு 8 வயதும் இருந்ததால் அவர்கள் ஆதரவற்றோர் விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களிடம் நடத்திய கவுன்சிலிங்கின்போது, அவர்களின் தாயார் வாழ்ந்து வந்த வீட்டின் முகவரியை கூறினார்கள்.
இதையடுத்து இந்த மாத தொடக்கத்தில் போலீசார் விசாரணைக்காக அந்த வீட்டை திறந்து சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் ரூ96 ஆயிரத்தி 500ம், தங்க நகைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து குழந்தைகள் நலவாரிய கமிட்டிக்கு தெரியப்படுத்தப்பட்டது.
பின்னர் அவர்கள் ரிசர்வ் வங்கியை அணுகி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரும்படி கேட்டனர். ஆனால் ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்து விட்டது.
இதனால் அந்த சிறுவன் தனது கைப்பட பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எனது அப்பா, அம்மா கூலித் தொழிலாளி. தந்தை இறந்துவிட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு என்னுடைய தாயாரும் கொலை செய்யப்பட்டார். எனது தங்கை பெயரில் நிரந்தர வைப்புத் தொகையாக இந்தப் பணத்தை டெபாசிட் செய்ய இருக்கிறேன். ஆகையால் எனது தாயார் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்துள்ள இந்த பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று எழுதியுள்ளான்