எங்கள் போராட்டமே காஷ்மீருக்காக தான்.. புல்வாமா தாக்குதல் குறித்து முதல்முறை மவுனம் கலைத்த மோடி
டோங்க்:காஷ்மீருக்காக தான் தொடர்ந்து போராடி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புல்வாமாவில் காதலர் தினமான கடந்த 14ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து பல மாநிலங்களில் தங்கி இருக்கும் காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, மிரட்டல் விடுப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறின.
அதனால், காஷ்மீர் மக்கள், தங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இடங்களை விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். இதையடுத்து, காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந் நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் டோங்க் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தீவிரவாதத்துக்கு எதிராக நாம் போரிட்டு வருகிறோம். மனிதநேயத்துக்கு எதிரானவர்களுடன் தான் நமது போராட்டம். காஷ்மீருக்காக தான் போராடுகிறோம்.
இந்த போராட்டம் காஷ்மீர் மக்களுக்கு எதிராக அல்ல. காஷ்மீர் இளைஞர்களுக்கு எதிராக சமீபகாலமாக நடந்து வரும் சம்பவங்களை ஏற்க முடியாது.
காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அங்குள்ள ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவுடன் உள்ளது. நமது போராட்டம் தீவிரவாதத்துக்கு எதிராக மட்டுமே என்று கூறினார்.