'கிராவிட்டி' ஹாலிவுட் பட பட்ஜெட்டைவிட, செவ்வாய் ஆராய்ச்சிக்கு செலவு குறைவு... மோடி பெருமிதம்
ஸ்ரீஹரிகோட்டா: சார்க் நாடுகளுக்காக இந்தியா சார்பில் பொது செயற்கைக்கோள் உருவாக்கப்பட வேண்டும் என்று நரேந்திரமோடி விஞ்ஞானிகளிடம் கேட்டுக்கொண்டார், மேலும் ஹாலிவுட் திரைப்பட பட்ஜெட்டைவிட நமது விண்வெளி ஆய்வு திட்ட செலவு குறைவு என்றும் அவர் பெருமிதம் வெளியிட்டார்.
விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று பி.எஸ்.எல்.வி-சி23 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிறகு விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த வெற்றியின் மூலமாக, உலகில் விண்வெளி விஞ்ஞானத்தில் முன்னணியில் உள்ள ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துவிட்டது. இதற்காக விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.
மோடி
மோடி உரை வீடியோ
|
சாமானிய மனிதனை இணைக்கும்
தொழில்நுட்பம் சாமானிய மனிதனையும் இணைக்க உதவுகிறது. செயற்கைக்கோள் வாயிலாக கல்வி, மருத்துவம் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். தூரத்தை ஒரு பொருட்டாக இல்லாமல் மாற்றியது செயற்கைக்கோள் தொழில்நுட்பம்தான்.
வாழ்க்கைத்தரம் உயரும்
நமது விஞ்ஞானிகள், விண்வெளி தொழில்நுட்பத்தில் உலகத்திற்கே முன் உதாரணமாக திகழ்கிறார்கள். விஞ்ஞானிகளின் இந்த சாதனை, நமது நாட்டின் பல கோடி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்.
ஹாலிவுட் பட்ஜெட்டைவிட குறைவு
உலகிலேயே குறைவான செலவில் செயற்கைக்கோள் அனுப்புவது இந்தியாதான். ஹாலிவுட் திரைப்படமான 'கிராவிட்டி'யின் பட்ஜெட்டைவிட, செவ்வாய்க்கு மங்கள்யானை அனுப்பிய செலவு குறைவு.
சார்க் நாடுகளுக்கு 'கிப்ட்'
ஆனால் 'யே தில் மாங்கே மோர்' (இன்னும் அதிகம் வேண்டும்). இன்னும் நாம் நம்மை மேம்படுத்த வேண்டும். சார்க் நாடுகளுக்காக பொதுவான ஒரு செயற்கைக்கோள், உருவாக்கப்பட வேண்டும். இதை அண்டை நாடுகளுக்கு நாம் பரிசாக அளிக்க வேண்டும். அந்த செயற்கைக்கோளில், அண்டை நாடுகளுக்கு தேவைப்படும் தகவல்கள் இருக்க வேண்டும். இதனால் நமது அண்டை நாடுகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.