நாம விழுந்து விழுந்து கவனிச்சும்.. டொனால்ட் ட்ரம்ப்பின் பாகிஸ்தான் பாசத்தை பாருங்க.. அதிர்ச்சி!
அகமதாபாத்: டொனால்ட் ட்ரம்ப் வருகையையொட்டி, அகமதாபாத், ஆக்ரா டெல்லி நகரங்கள், விழாக்கோலம் பூண்டிருக்கிறது. இந்திய அரசு வெகு விமரிசையாக டிரம்புக்கு வரவேற்பு வழங்கிக் கொண்டிருக்க, ஆனால் அவரோ பாகிஸ்தான் மீது தனது பாசத்தை காட்டி விட்டார், என்பது சற்று அதிர்ச்சி தரும் விஷயம் தான்.
Recommended Video
அகமதாபாத் நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் ஒன்றாக மேடையில் தோன்றி உரையாற்றினர்.
மோடி தனது பேச்சின்போது, அடிக்கடி டொனால்டு டிரம்ப் தனது நண்பர் என்று குறிப்பிடத் தவறவில்லை. டொனால்ட் ட்ரம்ப் கூட தனது உரையின் போது அமெரிக்க மக்கள் இந்திய மக்களுடன் நெருங்கிய உறவைப் பேண விரும்புவதாக தெரிவித்தார்.
ஹவுடி மோடி
ஏற்கனவே, அமெரிக்காவுக்கு சென்றபோது ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சியில் மோடியுடன் டொனால்ட் ட்ரம்ப் ஒரே மேடையில் தோன்றி அங்குள்ள இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் உரையாற்றினார். இவ்வாறு இரு தலைவர்களும் தொடர்ந்து நட்பை பேணுவதாலும், இந்தியா தற்போது சோவியத் யூனியன் உடனான உறவை முன்பு போல மிக அதிக நெருக்கத்துடன் தொடரவில்லை என்பதாலும், அமெரிக்கா, இந்தியாவுடன் மிக நெருக்கம் காட்டும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.
சகிப்பு
ஆனால், டொனால்டு டிரம்ப் தனது உரையின்போது பாகிஸ்தான் பற்றி பேசியது கண்டிப்பாக அதிர்ச்சி ரகம். அவர் பேசுகையில், பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு நல்ல நிலையில் உள்ளது. தொடர் முயற்சிகளின் காரணமாக பாகிஸ்தான் உடனான உறவில் நல்ல முன்னேற்றம் இருப்பதை காணமுடிகிறது. தெற்காசியாவில், பதற்ற நிலை குறைந்து, நிலையான அமைதி மற்றும் சகிப்புத்தன்மை வளரும் என்று நான் எதிர்பார்க்கிறேன், என்று பேசினார்.
மோடி ரசிக்கவில்லை
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு ரத்து செய்த நிலையில், அதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் ஐ.நா.சபை வரை எழுப்பியது. இப்படியான ஒரு சூழ்நிலைக்கு நடுவே, பாகிஸ்தானை இந்திய மண்ணில் வைத்து டொனால்ட் ட்ரம்ப் புகழ்ந்து பேசியிருப்பதை, மோடி அவ்வளவாக ரசிக்கவில்லை.
தளவாடங்கள்
ஒருபக்கம் இதை மேடையில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்க தயாரிப்பு ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்கக்கூடிய ஒப்பந்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டார் ட்ரம்ப். மற்றொரு பக்கம் பாகிஸ்தானையும் அவர் புகழ்ந்துரைத்தார். இதுதான் பாஜக ஆதரவாளர்களை கூட எரிச்சல் கிளப்பியுள்ளது.
மத ஒற்றுமை
மேலும், இந்துக்கள், முஸ்லிம்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் போன்ற அனைத்து மதத்தினர் நடுவேயான ஒற்றுமை முக்கியம் என்பதை தனது உரையின் போது இருமுறை தெரிவித்தார் ட்ரம்ப். குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவை மூலமாக சிறுபான்மையினர் இந்தியாவிலிருந்து வெளியேற்ற, முயற்சிகள் நடப்பதாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ட்ரம்ப் இவ்வாறு பேசியது முக்கியத்துவம் பெறுகிறது.