ஆணின் பாதுகாப்பு இல்லாமல் பெண்கள் இருக்க முடியாது.... பலாத்கார குற்றவாளியின் வக்கீல் பேச்சு!
டெல்லி: பெண்கள் பூக்களைப் போல. கோவிலில் வைத்தால் பூஜிக்கப்படுவார்கள். சாக்கடையில் விழுந்தால் சீரழிந்துதான் போவார்கள்.. இது ஒரு வக்கீலின் பேச்சு. அதுவும் பலாத்கார குற்றவாளிகளுக்கு கோர்ட்டில் வக்காலத்து வாங்கிப் பேசும் வக்கீலின் பேச்சு. நிர்பயாவை சீரழித்து அவரது உயிருக்கு உலை வைத்த நான்கு குற்றவாளிகளின் வக்கீலான எம்.எல்.சர்மாதான் இப்படிப் பேசியுள்ளார்.
அவர் மட்டுமல்லாமல் குற்றவாளிகளின் இன்னொரு வக்கீலான ஏ.கே.சிங்கும் இதேபோல பேசியுள்ளார். சர்மா ஒரு சமயத்தில் கூறுகையில், இந்திய கலாச்சாரத்தில் பெண்களுக்கு இடமே இல்லை என்று ஆணாதிக்கமாக பேசியுள்ளார்.
இந்த இருவரும் நிர்பயா குறித்த ஆவணப் படத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இருவரின் வக்கீல் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த வக்கீல்கள் பேசியுள்ள பேச்சுக்களுக்கு நிர்பயாவின் தாயாரும் கடும் கண்டனம் தெரிவித்துளார். எனது மகள் குறித்து இவர்கள் இப்படிப் பேசியுள்ள நிலையில் ஏன் அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் கேடிஎஸ் துள்சி கூறுகையில், இவர்களுக்கு நமது சமூகத்தின் மீது எந்தக் கவலையும் இல்லை என்பது தெரிய வருகிறது. இவர்களது பேச்சை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இப்படிப்பட்ட மன நிலை கொண்டவர் வக்கீலாக இருக்கிறார். இது குற்றத்தை விட மிகக் கொடுமையானது. பார் கவுன்சில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் துள்சி.
முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு ராமச்சந்திரன் கூறுகையில், கோர்ட்டுக்குள் தங்களது கட்சிக்காரருக்கு ஆதரவாக என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் வெளியில் இப்படிப் பேசக் கூடாது. பார் கவுன்சில் தானாக முன்வந்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆனால் தான் பேசியது திரித்துக் கூறப்பட்டுள்ளதாக சர்மா கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், லெஸ்லி உட்வின் என்னிடம் 10 நாட்கள் பேட்டி கண்டார். ஆனால் ஒரே ஒரு வரியைத்தான் காட்டியுள்ளார். பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பினால் நான் பதிலளிப்பேன் என்றார்.
ஆனால் இவர் அந்த ஆவணப் படத்தில் முட்கள் போன்றவர்கள் ஆண்கள், பலமானவர்கள், வலிமையானவர்கள். பூக்கள் போன்றவர்கள் பெண்கள். சாக்கடையில் விழுந்தால் சீரழிவார்கள். கோவிலில் விழுந்தால் பூஜிக்கப்படுவார்கள். ஆண்களின் பாதுகாப்பு எப்போதுமே பெண்களுக்குத் தேவை என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. எல்லோரும் அதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்... இந்த இருவரும் இப்படித்தான் நினைத்து விட்டார்கள் போலும்.