அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாங்கள் தான்... வெளியாட்களுக்கு இங்கு அனுமதியில்லை... திரிணாமுல் காங். உறுதி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் ஆட்சியில் இருக்கும் என்றும் மாநிலத்திற்குள் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது என்றும் திரிணாமுல் காங். இளம் தலைவர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகின்றனர். இதனால் கடும் கோபத்திலுள்ள திரணாமுல் காங்கிரஸ் தலைமை அனைத்து மேடைகளிலும் தொடர்ந்து பாஜகவை மிகக் கடுமையாகச் சாடி வருகிறது.
50 ஆண்டுகள்
மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவருமான அபிஷேக் பானர்ஜி இன்று பர்கானாஸ் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "வரும் சட்டமன்ற தேர்தலில் வென்று, மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் ஆட்சியை அமைக்கும். 250க்கும் மேற்பட்ட இடங்களில் நாங்கள் வெல்வோம். இது மட்டுமின்றி அடுத்த 50 ஆண்டுகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருக்கும்.
வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது
மேற்கு வங்க மக்கள் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜியையே தேர்ந்தெடுக்கவுள்ளனர். வட இந்தியாவிலிருந்து வரும் வெளிநபர்களுக்கு வங்கத்தின் கலாசாரம் குறித்து ஒன்றும் தெரியாது. தொடர்ந்து போலியான செய்திகளை மக்களிடையே பரப்பி, அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்து முயல்கின்றனர். ஆனால், துர்கை அம்மனை போல் இருந்து மம்தா பானர்ஜி நம்மைக் காப்பார். பாஜக முதலில் குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களை ஒழுங்காக நிர்வகிக்கட்டும்" என்று அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ஜெய் ஸ்ரீ ராம்
பாஜகவினர் ராமரை வைத்தே அரசியல் செய்வதாகவும் அவர்களிடம் மாநிலத்தை வளர்க்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் விமர்சித்தார். ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடும் பாஜக தலைவர்கள், பெண்களை மதிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பாஜக ஆளும் குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண்கள் மிக மோசமாக நடத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்ட பாஜகவுக்கு செல்லும் தலைவர்கள் குறித்து கவலை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விலை போக மாட்டார்கள்
நேதாஜியின் பிறந்த நாள் விழாவின்போது, முதல்வர் மம்தா பானர்ஜியை திட்டமிட்டு அவமானப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளை மத்திய அரசு அளிப்பதாகவும் இருப்பினும், மேற்கு வங்கம் ஒரு போதும் பாஜகவுக்கு விலைபோகாது என்றும் அவர் பேசினார்.