காஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டன.. ஆசிரியர்களும் வந்தனர்.. ஆனால் மாணவர்கள்?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்று, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது.
ஸ்ரீநகர் நகரில் 190 தொடக்கப் பள்ளிகளைத் திறக்க அரசு தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. பெரும்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டனர்.
ஆனால் கடந்த வன்முறை, ஆர்ப்பாட்டங்களை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நிலை குறித்து பெற்றோர்கள் அச்சம் கொண்டிருந்ததால், நகரத்தின் அனைத்து தனியார் பள்ளிகளும் தொடர்ந்து 15 வது நாளாக மூடப்பட்டிருந்தன.
பெமினாவில் உள்ள போலீஸ் பப்ளிக் பள்ளி மற்றும் ஒரு சில கேந்திரியா வித்யாலயாக்கள் மட்டுமே இயங்கின. ஒரு சில மாணவர்கள்தான் அங்கும் கல்வி கற்க சென்றனர்.
"5 நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாக பாரமுல்லா மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள மாவட்டங்களில், பள்ளிகள் திறக்கப்பட்டன. பட்டன், பால்ஹலன், சிங்போரா, பாரமுல்லா மற்றும் சோபூர் நகரங்களில் கட்டுப்பாடுகளில் எந்த தளர்வும் இல்லை. மாவட்டத்தின் பிற பகுதிகளில் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்தந்த பள்ளிகள் வழங்கிய மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம், " என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் பெருமளவுக்கு வந்திருந்தனர். மாணவ, மாணவிகள் எண்ணிக்கைதான் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு குறைவாக இருந்தது.