மேற்குவங்கத்தில் ஒரே நாளில் 700 அரசு டாக்டர்கள் ராஜினாமா... மம்தாவுக்கு நெருக்கடி முற்றுகிறது!
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஒரே நாளில் 700க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ராஜினாமா செய்ததால், மம்தா அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 11ந் தேதி உயிரிழந்தார். இதற்கு பயிற்சி மருத்துவர்கள் சரிவர கவனிக்காததே காரணம் என்று கூறி, நோயாளியின் உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பயிற்சி மருத்துவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, டாக்டர்களின் போராட்டத்திற்கு பாஜக, கம்யூனிஸ்ட்டுகளின் தூண்டுதல்தான் காரணம் என்று தெரிவித்தார்.
மேலும், 4 மணிநேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கெடு விதித்தார். இதனால் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்த மருத்துவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். மேற்கு வங்கம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று 5வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் 50 டாக்டர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், அங்குள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளை சேர்ந்த டாக்டர்கள் அரசின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொத்து கொத்தாக ராஜினாமா செய்து வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆர்ஜிகர் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 107 டாக்டர்களும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த 100 டாக்டர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
சாகோர் தத்தா மருத்துவமனையை சேர்ந்த 21 டாக்டர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் வெவ்வேறு மருத்துமனைகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ராஜினாமா செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல மூத்த மருத்துவர்களும் பதவி விலகியுள்ளதால், அம்மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா உள்ளிட்ட அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் டாக்டர்கள் இல்லாததால், வெளி நோயாளிப் பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. இதனால், லட்சக்கணக்கான நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பிரச்னையை சுமூகமாக முடிப்பதற்கான முயற்சிகளை மேற்கு வங்க அரசு எடுக்க வேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.