ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்துவிட்டோம்: சக்திகாந்த தாஸ்
டெல்லி: இதுவரை ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்களை சப்ளை செய்துள்ளதாக டெல்லியில் மத்திய அரசின், பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சக்திகாந்த தாஸ் கூறியது: நவம்பர் 8ம் தேதி வெளியான பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு, இதுவரை, ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. மொத்த பண புழக்கத்தில் பாதி அதாவது 50 சதவீதம் அளவுக்கு நாங்கள் சப்ளை செய்துவிட்டோம். எனவே இனிமேல் போகப்போக நிலைமை சரியாகவே செய்யும்.
100 ரூபாய்க்கு குறைவான நோட்டுக்கள் மிக அதிக அளவில் வினியோகம் செய்து வருகிறோம். கடந்த 5 வாரங்களில் இதுபோல சப்ளை செய்யப்பட்ட குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களின் அளவு, ஓராண்டில் ரிசர்வ் வங்கி அனுப்பும் வழக்கமான அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
தேவையான இடங்களுக்கு விமானம் மூலம் பணம் அனுப்பி வைக்கப்படுகிறது. சட்ட விரோதமான பணம் உள்ளே வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பணம் எளிதாக கிடைக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முறைகேடுகளை தடுக்க ரிசர்வ் வங்கி மட்டுமின்றி அரசின் பல்வேறு துறைகளும் இணைந்து செயல்படுகின்றன. இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.