கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் அருமை.. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பாராட்டு
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மேலாண்மை சிறப்பாக நடைபெறுவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது.
குறிப்பாக, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, இந்த வெற்றிக்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தடுப்பு பணிகளில் பஞ்சாயத்துகளின் பணி முக்கியமானது. நாட்டிலேயே முதன்முறையாக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்தான், மாவட்ட கலெக்டர்களுக்கு ஈடான அதிகாரத்தை பஞ்சாயத்து தலைவர்களுக்கு வழங்கி கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.
இதன் காரணமாக, மாநிலம் முழுக்க நோய் கட்டுப்படுத்தப்பட்டது. கஞ்சம் மாவட்டத்தில் கூடுதலாக பலன் கிடைத்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்கவே ஒடிசா மாநில அரசின் கொரோனா தடுப்பு நிர்வாகம் பாராட்டை பெற்று வருகிறது. ஐரோப்பாவை சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், 310 நகரங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு நோய்த்தடுப்பு பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளதை பாருங்கள்:
கஞ்சம் மாவட்டத்தில், முதல் கொரோனா நோயாளி மே 2ம் தேதி, கண்டறியப்பட்டது. இப்போது அங்கு 188 நோயாளிகள் மட்டும்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்து தலைவருக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டதால், வீடு, வீடாக சென்று பரிசோதனைகளை நடத்தினார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த பணியில் கை கொடுத்தார்கள்.
5 கிராமங்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற விகிதத்தில் மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள தாராவி குடிசைப்பகுதியில் கட்டுப்பாடு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.