உத்தரப்பிரதேசத்தில் 63 குழந்தைகள் பலியான விவகாரம்.. ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்தில் ரெய்டு!
உத்தரப்பிரதேச மருத்துவமனையில் 63 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்தில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கோரக்பூர்: உத்தரப்பிரதேச மருத்துவமனையில் 63 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்தில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கடந்த 2 நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
63ஆக அதிகரிப்பு
இன்று மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, 6 நாட்களில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
நிலுவைத்தொகையை வழங்கவில்லை
இதையடுத்து மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகித்ததில் வழங்க வேண்டிய தொகையை மருத்துவமனை நிர்வாகம் வழங்கவில்லை எனத் தெரிகிறது.
ஆக்ஸிஜன் விநியோகம் நிறுத்தம்
இதன் காரணமாகவே ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
மருத்துவமனையின் அலட்சியம்
ஆக்ஸிஜன் தீரப் போவதை மருத்துவமனை ஊழியர்கள் வியாழக்கிழமை காலையில் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். ஆனாலும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. வியாழக்கிழமை ஆக்ஸிஜன் தீர்ந்த நிலையில் நேற்று மாலைதான் ஃபைஸாபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
5 நாட்களில் 63 குழந்தைகள் பலி
கடந்த 5 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. கடந்த வியாழக்கிழமை 23 குழந்தைகளும், திங்கள் கிழமை 9 குழந்தைகளும் செவ்வாய்க் கிழமை 12 குழந்தைகளும் நேற்று 7 குழந்தைகளும் உயிரிழந்துள்ளன.
மாவட்ட ஆட்சியர் மறுப்பு
ஆனால் இதனை மறுத்துள்ள மாவட்ட ஆட்சியர் ராஜீவ் ரவுத்லா ஆக்ஸிஜன் வேறு சப்ளையர்களிடம் இருந்து பெறப்பட்டு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். பெரும்பாலான குழந்தைகள் இன்பெக்ஷனாலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாஜக அரசுக்கு நெருக்கடி
இந்நிலையில், இந்த மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் மாநில சுகாதார அமைச்சர் ஆகியோர் பதவிவிலக வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.