ஏர்செல்-மேக்சிஸ்: அமலாக்கப்பிரிவு ப.சிதம்பரத்திடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவு!
Recommended Video
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜரானார். 7 மணி நேரம் நடந்த விசாரணை இப்போது முடிவிற்கு வந்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதில் ரூ.3,500 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திடமும் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தியுள்ளது. விசாரணைக்காக இன்று ஆஜராக சிதம்பரத்துக்கு அமலாக்க பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.
இதையேற்று, டெல்லியிலுள்ள அமலாக்க இயக்குநரகத்தில் சிதம்பரம் நேரில் ஆஜரானார். காலை 11.30 மணியளவில் அவர் அலுவலகம் உள்ளே சென்றார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றது.
முன்னதாக, சிதம்பரம் கோரியிருந்த முன் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஜூலை 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனவே இன்று விசாரணைக்கு பிறகு சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டிருந்தாலும் அது முடியாது.
ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது. ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.