தமிழகம், மகாராஷ்டிராவைவிட குஜராத் வளர்ச்சி மோசம்.. ப.சிதம்பரம் சொல்லும் புள்ளி விவரத்தை பாருங்கள்
Recommended Video
டெல்லி: குஜராத் மாநில பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சிதம்பரம் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
குஜராத் தொழில் மற்றும் வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த தொழிலதிபர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் கலந்துரையாடினார்.சிதம்பரம் கூறியதாவது:
அதிருப்தி
மும்பை-அகமதாபாத் நகரங்களுக்கு நடுவேயான புல்லட் ரயில் திட்டம் குறித்து அதிருப்தி வெளிப்படுத்திய சிதம்பரம், இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்துவதை பார்த்து, முழு மெஜாரிட்டி கொண்ட ஒரு அரசில் நான் நிதி அமைச்சராக பணியாற்றவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது என்று கிண்டல் தொனியில் தெரிவித்தார்.
பெரும்பான்மை பலம்
லோக்சபாவில் பாஜகவுக்கு இருக்கும் அறுதி பெரும்பான்மையை வைத்து, என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எங்களுக்கும் அப்படி ஒரு மெஜாரிட்டி எங்கள் அரசுக்கு இருந்திருந்தால், நிதி துறையை மொத்தமாக சீர்படுத்தியிருப்போம். சிறப்பான ஒரு ஜிஎஸ்டியை செயல்படுத்தியிருப்போம். இப்படி ஒரு மெஜாரிட்டி இருந்திருந்தால் எந்த ஒரு சட்டத்தையும் மாற்றியிருப்போம்.
தமிழகம் முன்னிலை
குஜராத்தில் ஆளும் பாஜக அரசு, பொருளாதார வளர்ச்சியை தப்பாக காண்பிக்கிறது. உண்மையிலேயே, தமிழகம், மகாராஷ்டிராவைவிட குஜராத் மாநில உற்பத்தி விகிதம் குறைவாகும். 2012-13ம் ஆண்டுக்கு பிறகு அது குறைந்து கொண்டே செல்கிறது. தனி நபர் வருமானமும், மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தை விட குஜராத்தில் குறைவு. தனி நபர் வருமானம், சிறு மாநிலமான கேரளாவுக்கு ஈடாகத்தான் உள்ளது.
நிலைமை இதுதான்
குஜராத்தின் சமூக செலவீனங்கள் 66.76 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகாவில் அதைவிட அதிகம். குஜராத்தின் எழுத்தறிவு விகிதம் குறைவு, தனிமனித செலவு குறைவு, வறுமை அதிகம், குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகம், ஆண்-பெண் பாலின விகிதமும் 919 என்ற அளவில் குறைவாக உள்ளது.
தென்மாநிலங்கள்தான் டாப்
இதையெல்லாம் வைத்து பாரத்தால் குஜராத் வளர்ந்துள்ளதாக கூறப்பட்டது எல்லாம் மாய்மாலம் என்பது தெரியும். புல்லட் ரயில் திட்டம் காரணமாக வருங்கால தலைமுறைக்கு 1 லட்சம் கோடி கடன் சுமை ஏற்படப்போகிறது. அகமதாபாத்-மும்பை நடுவே புல்லட் ரயிலில் 700 பேர் பயணிக்க முடியும். ஆனால் அதற்காக மற்றவர்கள் கடன் சுமையை ஏற்க வேண்டிவரும்.
பணமதிப்பு நீக்கம்
இந்திய பொருளாதரத்தில் பண மதிப்பு நீக்கம் பெரிய அடியாகும் ஜிஎஸ்டி வரி விதிப்பும் மறைமுக வரி விதிப்புக்கு கெட்ட பெயரை ஈட்டித்தரும். இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையே சரியில்லை. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.