விலைவாசி உயர்வை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை: ப. சிதம்பரம் தாக்கு
டெல்லி: விலைவாசி உயர்வுக்கு மாநில அரசின் மெத்தனம் தான் காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய அளவிலான பொருளாதார நிபுணர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
நிதி பற்றாக்குறை இலக்கில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது. நான் அரசுக்காக பேசுகிறேன். 2016-2017ம் ஆண்டுக்குள் உள்நாட்டு உற்பத்தியின் சதவீத இலக்கான 3 சதவீதத்தை அடையும் வரை சமரசமே கிடையாது. பண வீக்க உயர்வு மற்றும் நிதி பற்றாக்குறை ஆகியவற்றால் தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பதுக்கல்காரர்களை தடுக்க மாநில அரசுகள் தவறிய காரணத்தால் விலைவாசி உயர்ந்துவிட்டது என்றார்.