திருப்பூர் ஹோட்டலை அபகரித்த ப.சிதம்பரம் உறவுப்பெண்...சிபிஐக்கு டெல்லி கோர்ட் நோட்டீஸ்
திருப்பூர் ஹோட்டலை ப. சிதம்பரத்தின் உறவுப் பெண் அபகரித்த வழக்கில் சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: திருப்பூர் ஹோட்டலை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவுக்கார பெண் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கின் நிலை என்ன என்று விளக்கம் கேட்டு சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பூரில் 'கம்பர்ட் இன்' என்ற உயர்தர ஹோட்டலை டாக்டர் கதிர்வேல் என்பவர், தன் நண்பர்களுடன் இணைந்து கூட்டாக நடத்தி வந்தார்.கடந்த 2007ம் ஆண்டு, 'கம்பர்ட் இன்' ஹோட்டலை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் சகோதரி, பத்மினி என்பவர் அபகரித்து விட்டதாக கதிர்வேல் புகார் தெரிவித்து இருந்தார்.அப்போது அரசியலில் ஹோட்டல் அபகரிப்பு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.பின்னர் ஹோட்டலை மீட்டுத்தர வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் கதிர்வேல் வழக்கு தொடர்ந்தார்.
கதிர்வேல் தனது மனுவில்,"இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நான் ரூ.2 கோடியே 50 லட்சம் கடன் பாக்கி வைத்திருந்தேன். அதை வாராக்கடனாக அறிவித்து ஹோட்டலை ஏலம் விடுவதாக வங்கி நிர்வாகம் அறிவித்தது.எனவே ஏலத்தை தவிர்க்க நான் ரூ.64 லட்சம் செலுத்தியதும், ஏலத்தை கைவிடுவதாக வங்கி நிர்வாகம் பின்னர் கூறியது. ஆனால், போலியாக ஏலம் நடத்தி, ரூ.10 கோடி மதிப்புள்ள அந்த ஹோட்டலை வெறும் ரூ.4 கோடியே 50 லட்சத்துக்கு பத்மினிக்கு,ஐஓபி வங்கி நிர்வாகம் ஒதுக்கிவிட்டது. வங்கி அதிகாரிகள் மற்றும் நளினி சிதம்பரத்தின் துணையுடன் எனது சொத்தை பத்மினி அபகரித்து விட்டார்.
இதுதொடர்பாக, ப.சிதம்பரம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான எனது புகாரை சி.பி.ஐ.யின் தமிழக பிரிவு ஏற்க மறுத்ததால், சி.பி.ஐ. இயக்குனரிடம் புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை."என்று கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஆர்.கே.கவுபா முன்பு விசாரணைக்கு வந்தது. கதிர்வேல் புகார் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய நிலவர அறிக்கையை வரும் ஜூலை 25-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.இதனால் மீண்டும் சிபிஐ வளையத்தில் வந்துள்ளது ப.சிதம்பரம் குடும்பம்.