பரபரப்பான சூழலில் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 2014-2015ம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்கும் மத்திய அரசு 2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூன், ஜூலை மாதங்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும். அந்த அரசு வரும் வரை ஜூலை மாதம் வரையிலான செலவினங்களுக்கு அனுமதி பெறுவதற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
முழுமையான பட்ஜெட் போன்று இடைக்கால பட்ஜெட்டில் வருவாய் தொடர்பாக எந்தவித புதிய அறிவிப்பும் இடம் பெறாது. அதாவது புதிய வரிகள் குறித்த அறிவிப்பு இருக்காது. ஆனால் தேர்தல் நெருங்குவதால் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தை மேம்படுத்த சேவை மற்றும் உற்பத்தி வரி விகிதங்களை குறைக்கப் போவதாக ப. சிதம்பரம் தெரிவித்திருந்தார். 2012-2013ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதம் அளவுக்கு ஏன் குறைந்தது என்பது குறித்து சிதம்பரம் இன்று விளக்கம் அளிக்கலாம்.
மேலும் இந்தியாவை அதீத வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கம் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மிளகு ஸ்ப்ரே, கத்தியை காட்டி பிரச்சனை செய்த நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.