ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஏர்செல்-மேக்சிஸ் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக இன்று அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை நடத்தியது.
2006 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சட்டத்தை மீறி ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.
சுமார் ரூ.3,500 கோடி மதிப்புக்கு மேலான அன்னிய நேரடி முதலீடு தொடர்பான இந்த விவகாரத்திற்கு சிதம்பரம் ஒப்புதல் அளித்தது விவாதத்திற்கு உரியதாக உள்ளது.
ஏனெனில் 600 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு மட்டுமே நிதி அமைச்சரால் அங்கீகாரம் அளிக்க முடியும். அதற்கு மேலான அன்னிய முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு தான் அனுமதி வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சரவை குழுவிடம் அனுமதி வாங்கவில்லை என்பது குற்றச்சாட்டு.
அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெறுவதற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் பினாமி நிறுவனமாகக் கருதப்படும் அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் நிறுவனம் உதவி செய்ததாகவும், அதற்கு மாறாக பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜூன் 5ம் தேதி, சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியிருந்த நிலையில், இன்று டெல்லியில் மீண்டும் சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இப்போது மேலும் பல புதிய கேள்விகளை எழுப்பி சிதம்பரத்திடம் பதில் பெற்றதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய அக்டோபர் 8ம் தேதிவரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.