கேன்சர் வருவதற்கு முன் ஜென்ம பாவங்களே காரணம் என்று சொன்ன அஸ்ஸாம் அமைச்சருக்கு ப.சிதம்பரம் பதிலடி
கேன்சர் வருவதற்கு செய்த பாவங்களே காரணம் என்று சொன்ன அஸ்ஸாம் அமைச்சருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார் ப.சிதம்பரம்.
Recommended Video
டெல்லி: கேன்சர் போன்ற நோய்கள் இளவயதிலேயே வருவதற்கு காரணம் முன் ஜென்ம பாவங்களே என்று சொன்ன அஸ்ஸாம் அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் ஹிமந்த பிஸ்வா சர்மா. இவர் நேற்று குவஹாத்தியில் நடந்த ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய சர்மா, நமது பாவங்களுக்கு நாம் கட்டாயம் துன்பம் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது விதி.
இளவயதிலேயே சிலருக்கு புற்றுநோய் அல்லது வேறு விதமான ஆட்கொல்லி நோய்கள் வருவதைப் பார்க்கிறோம். அது எல்லாம் அவர்களின் பாவங்களுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை. அது தான் கடவுளின் நியதி. நாம் அனைவரும் அதற்கு கட்டுப்பட்டவர்களே. வேறு எதுவும் செய்ய முடியாது என்றார்.
ஒரு மாநிலத்தில் சுகாதாரத்துறையை நிர்வகிக்கும் அமைச்சரே இவ்வாறு பேசி இருப்பது அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில், அமைச்சர் இப்படி பேசி இருப்பதற்கு காரணம் கட்சிவிட்டு கட்சி மாறினால் இப்படித்தான் பேச வேண்டி இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.
'Cancer is divine justice for sins' says Assam Minister Sharma. That is what switching parties does to a person.
— P. Chidambaram (@PChidambaram_IN) November 22, 2017
இதற்கு முன் 20 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த சர்மா, நான்கு முறை அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார். 2015ல் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க.,வுக்குத் தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைக் குறிக்கும் விதமாக ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிலடி கொடுத்து உள்ளார்.