பாலியல் புகார் தொடர் சர்ச்சையால் விடுப்பில் சென்றார் பச்சோரி.. நிர்வாக குழு இன்று கூடுகிறது
டெல்லி: தேரி அமைப்பின் துணை தலைவர் பச்சோரி விடுப்பில் சென்றுள்ள நிலையில், அதன் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
தேரி அமைப்பின் தலைவராக முன்பு இருந்தவர் பச்சோரி. அப்போது இவருக்கு எதிராக பாலியல் புகார் கிளம்பியது. இதையடுத்து அவர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து தலைவர் பதவியிலிருந்து விலகினார். மேலும், சர்வதேச பருவ நிலை மாற்றம் தொடர்பான குழுவின் தலைவர் பதவியிலிருந்தும் அவர் விலகினார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேரி அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் பச்சோரி. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது புதிதாக உருவாக்கப்பட்ட பதவியாகும்.
இந்தச் சூழ்நிலையில் பச்சோரி மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது விடுமுறையில் போய் விட்டார் பச்சோரி. மேலும் அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து பச்சோரி கட்டாய விடுப்பில் சென்றுள்ளார். தேரி துணை வேந்தர் (பொறுப்பு) ராஜிவ் சேத், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மார்ச் 7ம் தேதி நடைபெற உள்ளது. அதிலும் பச்சோரி பங்கேற்க மாட்டார். அவர் தொடர் விடுமுறையிலுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேரி நிர்வாக குழு கூட்டம் இன்று கூடுகிறது. இதில் பச்சோரி மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.