மறைந்த 'துக்ளக்' சோவுக்கு பத்மபூஷண் விருது - மத்திய அரசு அறிவிப்பு
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் அரசியல் விமர்சகருமான மறைந்த சோ. ராமசாமிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் 89 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் 7 பத்மவிபூஷண், 7 பத்ம பூசண், 75 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 19 பேர் பெண்கள் ஆவர். மறைந்த 6 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர் சோ ராமசாமி.
சென்னை மயிலாப்பூரில் 1934 பிறந்தவர். பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார்.
சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்ற இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு, முகமது பின் துக்ளக், சரஸ்வதி சபதம் உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின.
விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார்.
தேன்மொழியாள் என்ற நாடகத்தில் சோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.
திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
துக்ளக் வார இதழை 1970-ம் ஆண்டும், பிக்விக் என்ற ஆங்கில இதழை 1976ம் ஆண்டும் தொடங்கினார்.
அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.
தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார்.
1999ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.