தீபிகா படுகோன் மூக்கை அறுப்பேன் : பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் மிரட்டல்
பத்மாவதி திரைப்படம் வெளியானால் தீபிகா படுகோன் மூக்கு அறுக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை : பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்த வரலாற்றுத் திரைப்படமான பத்மாவதிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
பாலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, இவர் தற்போது ராஜஸ்தானின் சித்தூர் அரசி பத்மாவதி குறித்த வரலாற்றுப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்தப்படம் தங்களை தவறாக சித்தரிப்பதாகக் கூறி ராஜ்புத் கார்னி சேவா என்கிற அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் நடந்த படப்பிடிப்பின் போது, உள்நுழைந்த எதிர்ப்பாளர்கள் ஷூட்டிங்கிற்காக போடப்பட்டு இருந்த செட்டுகளை உடைத்து பணியாளர்களைத் தாக்கினர். மேலும் படப்பிடிப்பு உபகரணங்களையும் சேதப்படுத்தினர்.மேலும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியும் அந்தத் தாக்குதலில் காயம் அடைந்தார்.
வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
இதன்பின்பு படத்தின் போஸ்டர் வெளியீட்டின் போதும் தீவைத்துக்கொளுத்தி தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினர். படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து படம் வெளியானால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இயக்குநருக்கு தொடர் மிரட்டல் வந்தது.
டீசர் வெளியீட்டில் போராட்டம்
சமீபத்தில் இந்தப்படத்தின் டீசர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஆகாஷ் மாலில் வெளியிடத் திட்டமிட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டீசர் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ராஜ்புத் கார்னி சேனாவின் மகிபால் சிங் மக்ரானே என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
ராஜபுத்திரர்கள் வீரமானவர்கள்
அதில் ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் வீரமானவர்கள். பெண்களைத் தேவை இல்லாமல் சீண்டமாட்டார்கள். ஆனால், இந்தப்படம் வெளியானால் ராமாயணத்தில் லக்ஷ்மண் சூர்ப்பனகைக்கு என்ன செய்தானோ அதை நான் தீபிகா படுகோனுக்குச் செய்வேன். இது சத்தியம் என்று மிரட்டல் விடுத்து உள்ளார்.
ரத்தம் கொண்டு துடைப்போம்
மேலும், இந்தப்படம் திட்டமிடப்பட்டுள்ள டிசம்பர் 1ம் தேதி வெளியானால் மாநிலத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும். எங்கள் முன்னோர்களின் வரலாறு களங்கமற்றது. அதை யாராவது களங்கப்படுத்த நினைத்தால் அவர்களின் ரத்தம்கொண்டே அந்தக் களங்கத்தை துடைப்போம் என்றும் அந்த வீடியோவில் கூறி உள்ளார்.
யோகி ஆதித்யநாத் கடிதம்
ராஜஸ்தான் மட்டுமின்றி மகாராஷ்ட்ரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், குஜராத், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இந்தப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்து இருக்கிறது. உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.