சென்சார் போர்டில் "சங் பரிவார்" உறுப்பினர்கள்: மத்திய அரசு நியமனம்!
டெல்லி: மத்திய சென்சார் போர்டில் இந்துத்துவா சிந்தனை கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமது சீடர்களுக்கு ஆண்மையை அகற்றிய வழக்கை எதிர்கொண்டிருக்கும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங் நடித்துள்ள படம் 'மெஸஞ்சர் ஆப் காட்'. இத்திரைப்படத்துக்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுப்பு தெரிவித்தது.
ஆனால் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் படத்துக்கு அனுமதி வழங்கியது. தற்போது நாடு முழுவதும் சீக்கியர்கள் இந்த திரைப்படத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சர்ச்சையில் மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவான சென்சார் போர்டின் தலைவராக இருந்த லீலா சாம்சன் பதவியை ராஜினாமா செய்தார்.
அவருக்கு ஆதரவாக சென்சார் போர்டின் 9 உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். தற்போது சென்சார் போர்டின் தலைவராக சினிமா தயாரிப்பாளர் பஹ்லாஜ் நிஹாலனி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் 9 பேர் புதிய உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பஹ்லாஜ் நிஹாலனி 'ஷோலா அவுர் ஷப்னம்', 'அந்கேன்' உள்ளிட்ட திரைப்படங்களை 1990களின் தொடக்கத்தில் தயாரித்தவர். அண்மையில் 'Har Ghar Modi' என்ற தலைப்பில் நரேந்திர மோடிக்கான 6 நிமிட பிரசார வீடியோவை தயாரித்திருந்தார் பஹ்லாஜ் நிஹாலனி.
புதிய சென்சார் போர்டில் இடம்பெற்றுள்ள ரமேஷ் படாங்கே. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதி. விவேக் என்ற மராத்திய வார இதழின் ஆசிரியர். இந்த ரமேஷ் படாங்கே, 'அடல்ஜி- தி பாத்ஃபைண்டர்' என்ற தலைப்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.
பாரதிய ஜனதாவின் பொதுச்செயலர் வாணி திரிபாதி, தொலைக்காட்சி தயாரிப்பாளர் அசோக் பண்டிட், தமிழ் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஜீவிதா ராஜசேகர், மோடியை சந்தித்து பா.ஜ.க.வில் இணைந்த தமிழ் நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகர் ஆகியோரும் சென்சார் போர்டு உறுப்பினர்களாக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 'சாணக்யா' தொலைக்காட்சி தொடர், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை குறித்த பின்ஜார் திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய சந்திர பிரகாஷ் திரிவேதி, லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்ட அஸ்ஸாமிய மொழி நடிகர் ஜார்ஜ் பாகெர், குஜராத் மத்திய பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சயீத் அப்துல் பரி, திரைப்பட வசன கர்த்தாவான மிகிர் பூட்டா ஆகியோரும் சென்சார் போர்டு உறுப்பினர்களாக்கப்பட்டுள்ளனர். இந்த மிகிர் பூட்டா, மோடி பற்றிய வெளிநாடு வாழ் இந்தியர் பற்றிய படத்துக்கு வசனம் எழுதியவரும் கூட.