பாகிஸ்தானைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்....!
டெல்லி: பாகிஸ்தான் அரசு, எல்லைப் பகுதியில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சயீத் கூறியுள்ளார்.
மேலும், சம்பா மற்றும் கத்துவா மாவட்டங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் பிரச்சினை கிளப்புமாறு கோரி இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அமைதிப் பேச்சுக்களை சீர்குலைக்கும் விதமாகவே இந்த தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முப்தி முகம்மது சயீத் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டசபையில் இதுகுறித்து அவர் பேசுகையில், பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் அமைதி திரும்பும், மறு சீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர முடியும்.
ஜம்மு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. மீண்டும் மாநிலத்தில் அமைதி திரும்பும் என நம்புகிறேன்.
இந்தியாவுடன் பாகிஸ்தான் நட்புறவை விரும்பினால், இங்கு அமைதி திரும்ப அது உதவ வேண்டும். இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோரை உடனடியாக அவற்றை நிறுத்துமாறு அது அறிவுறுத்த வேண்டும் என்றார் சயீத்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் சட்டசபை கடியபோது கத்துவா, சம்பா மாவட்ட தாக்குதல் தொடர்பாக பெரும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாகிஸ்தானைக் கண்டித்துத் தீர்மானம் போட வலியுறுத்தினர். இறுதியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.