பாக்.கிலிருந்து வெடிபொருட்களுடன் இந்தியாவுக்கு வரும் கப்பல்: உளவுத் துறை எச்சரிக்கை.. பரபரப்பு
மும்பை: பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வருவதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மும்பை கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நாச வேலையில் ஈடுபட பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கப்பல் ஒன்று வருவதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த கப்பல் மகாராஷ்டிரா அல்ல குஜராத் கடல் வழியாக இந்தியாவுக்கு வர வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மும்பை கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பைக்கு வரும் அனைத்து வணிக கப்பல்களையும் கடலோர காவல்படையினர் கண்காணித்து வருகிறார்கள். இது குறித்து கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இந்திய எல்லைக்குள் வரும் அனைத்து கப்பல்களும் சோதனை செய்யப்படும். உளவுத் துறையின் எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.