நாளை நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான் தீவிரவாதி நவீத் யாகூப்
ஜம்மு : உதம்பூர் மாவட்டத்தில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி நவீத் யாகூப் நாளை நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க உள்ளான்.
காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது கடந்த 5 ஆம் தேதி தீவிரவாதிகள் 2 பேர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒரு தீவிரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு தீவிரவாதியான முகமது நவீத் யாகூப் , உயிருடன் பிடிபட்டான். அவனிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நவீத் யாகூப்பின் விசாரணைக் காவல் முடிந்ததையடுத்து, அவனை பலத்த பாதுகாப்புடன் ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது, தீவிரவாதி நவீத் யாகூப், ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவனை 2 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். எனவே, நாளை நீதிபதி முன்னிலையில் நவீத் யாகூப் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பான் என எதிர்பார்க்கப்படுகிறது.