மோடி பிரதமரான பின்னர் 19 முறை பாக். துப்பாக்கி சூடு - அருண் ஜேட்லி
டெல்லி: நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் பாகிஸ்தான் 19 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் இது தொடர்பாக அருண் ஜேட்லி கூறியதாவது:
கடந்த 16-ந்தேதி வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப்பகுதியிலும், சர்வதேச எல்லைப் பகுதியிலும் போர் நிறுத்தத்தை 54 முறை பாகிஸ்தான் மீறி உள்ளது.
19 முறை துப்பாக்கிச் சூடு
கடந்த மேமாதம் 26 ந்தேதி முதல் ஜூலை 17 ந்தேதி வரை 19 முறை துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது.
நவாஸ் ஷெரீப்புடன் ஆலோசனை
பிரதமர் மோடி பதவி ஏற்றுக் கொண்டபோது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அழைத்துப் பேசினார். அப்போது இரு நாடுகளும் நட்புறவுடன் இருப்பது குறித்து பேசப்பட்டது.
ஷெரீப்பிடம் மோடி வலியுறுத்தல்
எல்லை கட்டுப்பாடு கோட்டுப்பகுதியின் புனிதத் தன்மையை பாதுகாப்பதும், இப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதும் மிக முக்கியம் என்று பிரதமர் மோடி அவரிடம் வலியுறுத்தினார்.
விதி மீறும் பாகிஸ்தான்
எனினும், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறிக் கொண்டே இருக்கிறது.
வேடிக்கை பார்க்கமாட்டோம்
இந்த தாக்குதல்களை நாங்கள் வேடிக்கை பார்த்து தலையை தொங்கப்போட்டு கொண்டு சும்மா இருக்க மாட்டோம். எல்லையில் பாகிஸ்தான் போர் நிறுத்த விதிமுறைகளை மீறினால் தக்க பதிலடி கொடுப்போம். எனவே பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்கவேண்டும்.
இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.