இந்தியா மீது “சைபர் வார்” - திகிலடிக்க வைக்கும் பாகிஸ்தான் திட்டம்
டெல்லி: இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு மாற்று யுத்தத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்தியா மீது எல்லைத் தாக்குதல், தீவிரவாதிகள் ஊடுருவல் தாக்குதல் போன்றவற்றை நடத்தி வருகின்ற வேளையில் அவர்கள் தற்போது "சைபர் வார்" என்கின்ற புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளனர்.
இந்தியாவிற்கு எதிரான இந்த போரில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கிங் திறமைசலிகள் நம்முடைய முக்கிய அரசு இணையதளங்களைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத் துறையின் புதிய அறிவுரையின்படி, ஏற்கனவே அனைத்து அரசு தரப்பு இணைய ஆவணங்களையும் பாதுகாக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய ரகசியங்களை திருடுவது மட்டுமல்லாமல், ஹேக் செய்வதன் மூலம் அரசை பிரச்சினைக்குள்ளாக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.
ஐ.எஸ்.ஐயின் கிளையான பாகிஸ்தான் சைபர் ஆர்மி, ஏற்கனவே இது போன்ற பல நாச வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இணையக் குற்றங்களை செய்வதற்கு 500க்கும் மேற்பட்டோர் இந்த சைபர் ஆர்மியில் உள்ளனராம். அனைவரும் பாகிஸ்தானில் இருந்து இதற்காக உழைக்கும் அதிபுத்திசாலிகள். இவர்களுடைய முக்கிய வேலையே அரசாங்க கோப்புகளை இணையதளங்களில் இருந்து திருடுவதுதான்.
சில வருடங்களுக்கு முன்னர், பாகிஸ்தானின் சைபர் ஆர்மி இந்தியாவின் "சிபிஐ" இணையதளத்தினை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. பல நாட்கள் மூடப்பட்ட அந்த இணையதளம் பின்னர் மீண்டும் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சைபர் வார் என்றால் என்ன?
பாகிஸ்தானும், சீனாவுமே இந்தியா மீதான சைபர் வார் குற்றங்களில் அதிகம் ஈடுபட்டுள்ளன. பாகிஸ்தானின் முக்கிய நோக்கம் இந்திய இணையதளங்களை ஹேக் செய்து அனைவரையும் தடுமாற்றத்திற்கு உள்ளாக்குவதுதான். இணையதளப் போர் என்று இதற்கு பெயர் சூட்டியுள்ள பாகிஸ்தான், இதற்காக ஐ.எஸ்.ஐயுடன் கைகோர்த்துள்ளது. எல்லாவற்றையும் விட மிகவும் பயங்கரமான யுக்தியாக இதனை உளவுத்துறையினர் அறிவித்துள்ளனர்.