பாகிஸ்தானே சொல்லிடுச்சி.. உங்க முகத்திரை கிழிந்து போச்சு.. காங்கிரஸ் மீது மோடி அட்டாக்!
காந்திநகர்: நமது வீரர்களின் தியாகத்தை சந்தேகித்தவர்கள் முகத்திரையை பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு கிழித்து விட்டது என்று புல்வாமா தாக்குதல் தொடர்பாக தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் விழா குஜராத் மாநிலம் கெவாடியா பகுதியில் இன்று நடைபெற்றது. அப்போது சர்தார் வல்லபாய் படேலின் 600 அடி உயர சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மோடி.
பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
புல்வாமா தாக்குதலின் பின்னணியில் தங்கள் நாட்டு அரசு இருந்ததாக பாகிஸ்தான் அமைச்சர் சமீபத்தில் பேசியுள்ளார். நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை பார்த்து கேள்வி எழுப்பியவர்கள் முகத்திரை கிழிந்து விட்டது. புல்வாமா தாக்குதல் பற்றி சந்தேகம் எழுப்பி அவர்கள் எனது மனதை புண்படுத்தி விட்டனர். எனது மனம் மோசமாக காயப்பட்டு இருந்தது.
தயவு செய்து நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் நமது பாதுகாப்பு வீரர்களின் மனோதிடம் தொடர்பான விஷயம் என்பதால் இதுபோன்ற விவகாரங்களில் நீங்கள் அரசியல் செய்யாதீர்கள் என்று இதுபோன்ற அரசியல் கட்சிகளுக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது நாட்டின் பலம். இந்த பலம்தான் மற்றவர்கள் கண்ணை உறுத்துகிறது. எனவே நமது வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பு இந்தியாவின் பலவீனம் என்று அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அதுபோன்றவர்களை இனம் கண்டு கொள்வது அவசியம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கன்னியாகுமரி இடைத்தேர்தல்... களப்பணியில் காங்கிரஸ்.. விஜயதரணிக்கு விட்டுக்கொடுப்பாரா விஜய்வசந்த்..?
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி மாதம் 14ம் தேதி புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் பல மர்மங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி சமீபத்தில் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசும்போது புல்வாமா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது போன்ற அர்த்தத்தில் உரையாற்றியிருந்தார். பிறகு இதை ஊடகங்களிடம் மறுத்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இப்போது, பிரதமர் மோடி மறைமுகமாக காங்கிரசை தாக்கி இவ்வாறு பேசியுள்ளார்.