நாங்கள் சொல்லியிருக்கிறோம், செய்வதாக பாக். பிரதமர் கூறியிருக்கிறார் -குர்ஷித்
டெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பாகிஸ்தான் பிரதமரிடம் முன் வைத்துள்ளோம். அவரும் அதுகுறித்து செய்வதாக உறுதியளித்துள்ளார் என்று கூறியுள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நமது முக்கியப் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் பிரதமரிடம் நமது பிரதமர் எடுத்து வைத்துள்ளார். அனைத்துக் கவலைகளையும் நாம் தெரிவித்துள்ளோம். அதை செய்ய முடியாது என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் விளக்கினார் பாகிஸ்தான் பிரதமர்.
பாகிஸ்தான் பிரதமர் ஒரு நாட்டின் தலைவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். அவரிடம் போய் நீங்கள் சொல்வதை நம்ப முடியாது என முகத்தில் அடித்தாற் போல கூற முடியாது. நமது கவலைகளை தெளிவாக எடுத்து வைத்துள்ளோம். அவரும் உறுதியளித்துளளார்.
தாவூத் இப்ராகிம் குறித்து பாகிஸ்தான் பிரதமரிடம் பேசும் திட்டம் நமது பிரதமரிடம் இல்லை. அதேசமயம் ஹபீஸ் சயீத் குறித்து பிரதமர் பேசினார். பாகிஸ்தான் பிரதமரும், சயீத்தை நாங்கள் கைது செய்தோம். ஆனால் கோர்ட் ஜாமீனில் விடுதலை செய்து விட்டது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், எந்தத் தனிப்பட்ட நபர் குறித்தும் பாகிஸ்தான் பிரதமரிடம், நமது பிரதமர் பேசவில்லை. நமக்கென்று ஒரு அளவு உள்ளது. அதற்குட்பட்டுத்தான் பேச முடியும். நம்மிடம் உள்ள ஆவணங்களை அவரிடம் கொடுத்துள்ளோம். அவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்றார் குர்ஷித்.