பிரிவினைவாதி மஸ்ரத் ஆலமை 'பாக்கு வெத்தலை' வைத்து விருந்துக்கு கூப்பிட்ட பாக்.!
ஸ்ரீநகர்/ டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதி மஸ்ரத் ஆலமை தமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு அழைத்து இந்தியாவை அதிருப்தி அடைய வைத்துள்ளது பாகிஸ்தான். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இன்று நடைபெற்ற அந்நாட்டின் குடியரசு தின விழாவுக்குத்தான் மஸ்ரத் ஆலம் அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் மஸ்ரத் ஆலம் இதில் கலந்து கொள்ளவில்லை.
ஜம்மு காஷ்மீரை தனிநாடாக்கும் பிரிவினைவாதிகளில் மஸ்ரத் ஆலமும் ஒருவர். அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில் நல்லெண்ண அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக முதல்வர் முப்தி முகமது சயீத் அறிவித்திருந்தார்.
முதல் கட்டமாக மஸ்ரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் மோடி ஆட்சிக் காலத்தில் ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்த போதே மஸ்ரத் ஆலம் விடுதலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்த பஞ்சாயத்து ஓய்ந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இருப்பினும் இந்தியாவை சீண்டும் விதமாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் குடியரசு தின விழாவில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் மிர்வாஸ் உமர் பரூக் அழைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பிரிவினைவாதி மஸ்ரத் ஆலமையும் பாகிஸ்தான் தூதரகம் அழைத்துள்ளது. பாகிஸ்தானில் குடியரசு தின விழா கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று அந்நாட்டு அரசு இவ்விழாவை கொண்டாடி வருகிறது. இதன்படி பாகிஸ்தானில் குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த விழாவில் மஸ்ரத் ஆலம் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், பிரச்சினை இல்லாதவற்றை பிரச்சனையாக மாற்றாதீர்கள். மஸ்ரத் ஆலமை அழைத்ததற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று கருதுகிறேன் என்றார்.
இதுக்கு பேருதான் குசும்புங்கிறது!!