நடிகர் அனுபம் கெருக்கு விசா வழங்க மறுப்பு... இல்லவே இல்லை என்கிறது பாகிஸ்தான்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெருக்கு பாகிஸ்தான் விசா வழங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசால் பத்மபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் பாலிவுட் நடிகர் அனுபம் கெர். இவர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் வரும் வெள்ளியன்று நடைபெறும் இலக்கிய விழா ஒன்றில் பங்கேற்க உள்ளார்.
அனுபம் கெருடன் 18 இந்திய பிரபலங்களை இந்த விழாவில் பங்கேற்குமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
அனுபம் கெர்...
இந்நிலையில், அந்த இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள சிறப்பு அழைப்பாளர்களில் 17 பேருக்கு விசா வழங்கியுள்ள பாகிஸ்தான் அரசு, நடிகர் அனுபம் கெருக்கு மட்டும் விசா வழங்க மறுத்து விட்டது.
பாகிஸ்தான் கலைஞர்கள்...
இதுதொடர்பாக, அனுபம் கெர் கூறுகையில், ‘பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவில் நிகழ்ச்சிகளை நடத்த நாம் அழைப்பு விடுக்கிறோம். ஒரு இடத்தில் அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பினாலும், சில இடங்களில் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நம் நாட்டு மக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர்.
நம்பிக்கை வீணானது...
இதேபோல், கராச்சி இலக்கிய விழாவில் பங்கேற்று அங்குள்ள மக்கள் மனதில் இந்தியர்களைப் பற்றி பதிந்துள்ள தவறான அபிப்ராயங்களை நீக்கலாம் என்று நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை வீணாகி விட்டது' எனத் தெரிவித்துள்ளார்.
காரணம் தெரியவில்லை...
மேலும், தனக்கு விசா மறுக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு காரணம் தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை நான் காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்தவன் என்பதாலோ, அல்லது, சகிப்புத்தன்மையின்மைக்கு எதிரான எனது மாறுபட்ட கருத்துகளுக்காகவோ என்னை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்க அவர்கள் மறுத்திருக்கலாம்' என்கிறார்.
அதிர்ச்சி...
அனுபம் கெருக்கு பாகிஸ்தான் விசா அளிக்க மறுத்தது இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுப்பு...
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. ‘அனுபம் கெர் விசா விண்ணப்பத்தினை தாக்கல் செய்யவே இல்லை. ஒருவேளை விசா விண்ணப்பித்துள்ளது தொடர்பாக ஏதேனும் ரசீது பெற்றுள்ளாரா என்று சரிபார்த்து கொள்ளவும்' என பாகிஸ்தான் உயர் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் மன்சூர் அலி தெரிவித்துள்ளார்.