பாக். ராணுவம் அத்துமீறி தாக்கியதில் 3 இந்தியர்கள் பலி: ஊர்களை காலி செய்யும் காஷ்மீர் மக்கள்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்தியா எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாகவே கொண்டுள்ளது. தாக்குதலையும் நடத்திவிட்டு இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.
புத்தாண்டு அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள 13 எல்லைச் சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் அத்துமீறி இந்திய ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தை தாக்கினர். இதில் காயம் அடைந்த வீரர்கள் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் சம்பா மாவட்டம் மங்கு சாக் கிராமத்தைச் சேர்ந்த டோஷி தேவி(45) என்ற பெண் மற்றும் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளார்கள்.
காயம் அடைந்தவர்கள் ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீரின் சம்பா மற்றும் கதுவா மாவட்டத்தில் உள்ள மான்யாரி, பான்சர், போபியா, லோந்தி, சாடிசக், சைலரி, சாச்வல், மங்கு சாக், ரீகால், மாவா, சாதோ, சாக் பாரியா கிராம மக்கள் ஊர்களை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 13 வயது சிறுமி ஒருவரும் பலியாகிவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.