அங்க கிரிக்கெட்.. இங்க சண்டை.. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்படும் வீரர்கள்
இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
Recommended Video
டெல்லி: இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
இன்று இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளும் இன்று சந்திக்கிறது.
இந்த போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னே, இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி என்றால் சும்மாவா?
விவாதம்
இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடக்குமா என்பது குறித்து பல நாட்களாக விவாதம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பின்பு நிறைய அரசியல் இருப்பதால் பல வருடங்களாக இருநாடுகளும் சுற்றுப்பயணங்களில் ஈடுபடாமல் இருந்து வருகிறது. இரண்டு அணிகள் மட்டும் தனியாக ஒரு தொடரில் கூட பங்கேற்கவே இல்லை.
என்ன வரலாறு
2012 டிசம்பரில் தொடங்கி 2013 ஜனவரி வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது. அதுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக தனியாக மோதிய தொடர். அதன்பின் இந்தியாவில் தனியாக தொடர் விளையாட பாகிஸ்தானும் வரவில்லை, இந்தியாவும் பாகிஸ்தான் செல்லவில்லை. உலகக் கோப்பை போட்டி, ஆசிய கோப்பை, டி-20 கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடியது.
பூஜை செய்தனர்
இந்த நிலையில் ஆசிய போட்டியில் இன்று இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்று இந்தியாவில் பல இடங்களில் பூஜை நடந்தது. ஆம் இரண்டு அணிகளும் பல நாட்களுக்கு பின் இப்படி நேருக்கு நேர் மோதுகிறது. இதனால் இந்த போட்டியில் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்று பூஜை செய்து வருகிறார்கள்.
அதிக வீரர்கள்
இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியா எல்லையில் பெரிய அளவில் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்டு படைகளும் அதிக அளவில் எல்லையில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இயல்பாக இருப்பதை விட அதிக வீரர்கள் இந்திய எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
காரணம் 1
இதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. அதன்படி, இந்தியா பாகிஸ்தான் போட்டியை தொடர்ந்து ஏதாவது அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது என்பதால், இந்த மாதிரி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளும் நீண்ட நாட்களுக்கு பின்பு மோதுவதால் இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இன்னொரு காரணம் என்ன
நேற்று மாலை நரேந்திர குமார் என்ற இந்திய பாதுகாப்பு படை வீரர் காணாமல் போனார். இன்று காலை கண்டெடுக்கப்பட்ட அவர் கழுத்து அறுக்கப்பட்டு மரணம் அடைந்து இருந்தார். அவர் உடலில் மூன்று குண்டுகள் இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் இந்த மோசமான செயலை செய்துள்ளது. இதுவும் எல்லையில் பதட்டம் அதிகரிக்க காரணம் ஆகும்.
என்ன பிரச்சனை
போட்டி நடக்கும் அதே நாளில் எல்லையில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இரண்டு நாட்டிற்கும் பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. இதனால், தற்போது எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் இதுதான் இந்த பிரச்சனைக்கு காரணமா, இல்லை பாகிஸ்தானின் புதிய அதிபர் இம்ரான்கான் தான் காரணமா என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை.