காஷ்மீர் விவகாரம்.. அரபிக் கடலில் சர்ச்சைக்குரிய சர் கிரீக் பிரதேசத்துக்கு குறி வைக்கும் பாகிஸ்தான்?
பூஜ்(கட்ச்): ஜம்மு காஷ்மீரில் விஸ்வரூபத்தை காட்டி இருக்கும் மத்திய அரசுக்கு பதில் தருவதற்காக குஜராத்தின் கட்ச் பிராந்தியத்தில் உள்ள சர் கிரீக் பிரதேசத்துக்கு பாகிஸ்தான் குறிவைக்கலாம் என கூறப்படுகிறது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் பாகிஸ்தான் கமாண்டோ படையினர் தாக்குதல் நடத்தலாம் என்கிற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதேநேரத்தில் மத்திய அரசு இதனை மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கண்காணிப்பு நிறைந்த மும்பை கடற்பரப்பை ஒப்பிடுகையில் கட்ச் பிராந்தியத்தில் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புகள் அதிகம் உள்ள இடம். குஜராத்தின் கட்ச் பிராந்தியமானது கடற்பரப்பு மட்டும் கொண்டது அல்ல; சதுப்பு நிலப் பகுதியும் கூட.
கடற்பரப்பு பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படை, கடற்படையினர் கண்காணிப்பிலும் ரோந்து பணியிலும் ஈடுபடுவது வழக்கமான நடவடிக்கை. ஆனால் சதுப்பு நிலப் பகுதியான ரான் ஆப் கட்ச் பகுதி மிகவும் சவாலானது. பிரதான நிலப்பரப்பில் இருந்து சதுப்பு நிலத்தின் வழியே ஒருவழி மணற்பாதையை 100க்கும் அதிகமான கிலோ மீட்டர் கடந்து நமது எல்லைப் பகுதி உள்ளது.
அடிப்படை வசதிகளுக்கு கூட இத்தனை கிலோ மீட்டர் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை. ராணுவ விமானங்களோ, ஹெலிகாப்டர்களோ எளிதில் சென்றடைய முடியாத பகுதி. இந்த ரான் ஆப் கட்சியின் ஒருமுனையில்தான் சர் கிரீக் எனப்படும் சிந்து நதியின் டெல்டா பகுதி அமைந்துள்ளது.
ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் கொண்ட பகுதி. அதனால் பாகிஸ்தான் இதனை நாடு விடுதலை அடைந்தது முதலே உரிமை கொண்டாடி வருகிறது. இந்த சர் கிரீக் பகுதியை தம் வசப்படுத்தினால் ரான் ஆப் கட்ச் வழியாக கட்ச் வளைகுடாவுக்கு குறி வைக்கலாம் என்பது பாகிஸ்தானின் நீண்டகால சதி.
ஆஹா.. பாகிஸ்தான் பற்றி அமெரிக்க அறிக்கை இப்படி சொல்லுதே.. நல்லதில்லையே நமக்கு!
மேலும் அதிக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் கொண்ட பகுதியும் கூட. இதனால் இந்த சர் கிரீக் பகுதியை இந்தியா விட்டுக் கொடுக்காமல் பிடியில் வைத்திருக்கிறது. அதேநேரத்தில் இந்தியா- பாகிஸ்தான் முந்தைய யுத்த காலங்களில் ரான் ஆப் கட்ச் பகுதியில் உள்ள நமது முகாம்களை உடனடியாக தாக்கி முன்னேறும் யுக்தியை தொடர்ந்து பாகிஸ்தான் கடைபிடித்தும் வருகிறது.
ரான் ஆப் கட்ச் பகுதியில் முன்னேறி கட்ச் வரை வந்துவிட்டால் இந்திய ராணுவத்தின் கவனம் இப்பகுதிக்கு திசை திரும்பும்; அதனால் பிற ராணுவ நடவடிக்கைகளில் தேக்க நிலை ஏற்படும் என்பது பாகிஸ்தானின் யுக்தி. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீர், பால்டிஸ்தான் அத்தனை பகுதிகளும் ராணுவத்தால் குறிவைக்கப்பட்டுள்ளன.
இத்தனை ஆண்டுகாலம் ஆக்கிரமித்த காஷ்மீர் நிலப்பரப்புகள் ஒரே இரவில் கைவிட்டு போகும் பெரும் பதற்றத்தில் இருக்கிறது பாகிஸ்தான். இந்த ஒப்பாரியின் ஒரு வியூகமாக நமக்கு குடைச்சல் கொடுக்க கட்ச், சர் கிரீக் பிராந்தியங்களில் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்திருக்கலாம் என்பதையே இன்று வெளியான தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.