காஷ்மீரில் தாக்குதல்.. தீவிரவாதிகளுடன் சீனா பேச்சு.. குவிக்கப்படும் படைகள்.. புது சவால்!
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட அல் பதர் என்ற தீவிரவாத அமைப்புடன் சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் என்ற அதிர்ச்சி தகவலை புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே லடாக்கின் கிழக்குப் பகுதியில் தீவிர சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வரையறுக்கப்படாத எல்லாப் பகுதியில், இந்திய நிலப்பகுதிக்குள் சீனா ஊடுருவி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குல்.. சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்
மேலும் இந்திய விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் வகையில் பாகிஸ்தான் விஷயத்திலும் சீனா தலையிட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கும், கில்ஜித் பலுசிஸ்தானுக்கும் இடையே சர்ச்சை நடந்து வரும் நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு பாகிஸ்தான் 20000 வீரர்களை அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் தாக்குதலை நடத்த அல் பதர் என்ற தீவரவாத அமைப்புடன் சீன அதிகாரிகள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. இதில் இருந்து எல்லையில், சீனாவும், பாகிஸ்தானும் கைகோர்த்து செயல்படுகிறது என்பது புரியும்.
எல்லையில் பாக். வீரர்கள்
இந்திய பாகிஸ்தான் எல்லையில் கிழக்குப் பகுதியில் சீனா தனது ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. இதற்கு இணையாக இந்திய, பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கில்ஜித் பலுசிஸ்தான் பகுதிக்கு பாகிஸ்தான் சுமார் 20,000 வீரர்களை அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளாகும். பாலகோட் பகுதியில் விமான தாக்குதல் நடத்திய பின்னர், எல்லையில் எவ்வளவு வீரர்களை பாகிஸ்தான் நிறுத்தி இருந்ததோ அதற்கும் மேலாக தற்போது வீரர்களை அந்த நாடு நிறுத்தியுள்ளது.
எல்லைப் பகுதிகளில் அச்சம்
பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து ஒரே நேரத்தில் எல்லையில் இந்தியாவை எதிர்கொள்ளவும், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ளவும் துணிந்து இருப்பது எல்லையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக்கின் வடக்குப் பகுதியில் இருக்கும் கில்ஜித் பலுசிஸ்தான் பகுதியை முக்கியமானதாக பாகிஸ்தான் மற்றும் சீனா கருதுகின்றன. இந்தப் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் நுழைவது எளிது என்பதால், பாகிஸ்தானுடன் இணைந்து சீனா செயல்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சீனாவும், பாகிஸ்தானும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
பாக். ஆக்கிரமிப்பு
சீனாவும், பாகிஸ்தானும் இருதரப்பிலும் இருந்து இந்தியாவை தாக்குவதற்கு முயற்சிக்கும்பட்சத்தில் இந்தியாவிற்கு எல்லையில் கூடுதல் ராணுவ பலம் தேவைப்படும். ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்தபோது, லடாக் யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக கில்ஜித் பலுசிஸ்தான் இருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானால் இந்தப் பகுதி முன்பே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்தப் பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைவதையே விரும்புகின்றனர். பாகிஸ்தானும் இந்தப் பகுதியில் பொருளாதார வழி மண்டலத்தை அமைத்து வருகிறது. இது இந்தியாவுக்கு நிரந்தர தலைவலியாக இருக்கிறது.
சீன நிதியுதவி
இதற்கு முன்பு கார்கில் பகுதியில் பாகிஸ்தான் கடந்த 1999ல் ஊடுருவியது. அப்போது இந்தியா பாகிஸ்தான் வீரர்களை விரட்டி அடித்தது. காஷ்மீரில் தீவிரவாத செயல்களை ஏற்படுத்த தற்போது அல் பதர் என்ற தீவிரவாத அமைப்பை சீனா ஊக்குவித்து வருவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதாவது. அந்த தீவிரவாத இயக்கத்திற்கு நிதியுதவி அளித்து வலுப்படுத்துவதான் சீனாவின் திட்டம். இந்த விஷயம் புலனாய்வு மூலம் வெளியாகியுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு முன்பு காஷ்மீரில் பலமுறை தாக்குதல்களில் ஈடுபட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலையிடும் சீனா
லடாக் மட்டுமின்றி இந்தியாவின் அருணாசலப்பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் சீனா ஊடுருவ திட்டமிட்டு இருக்கிறது. சீனாவும், பாகிஸ்தானும் எல்லையில் கைகோர்த்து செயல்படுவது இந்தியாவுக்கு அச்சமளிப்பதாக இருக்கிறது. அல் பதர் தீவிரவாத அமைப்பு பலம் பெற்று வருவதை ஏற்கனவே காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் குறிப்பிட்டு இருந்தார். நடப்பு வாரத்தின் துவக்கத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கர்டு விமான தளத்தில் சீன விமானம் எரிவாயு நிரப்புவதற்காக இறங்கியதை அடுத்து இந்தியா அந்தப் பகுதியில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. இத்துடன் கில்ஜித் பலுசிஸ்தான் பகுதியில் இருக்கும் விமான தளத்தையும் சீனா பயன்படுத்தி வருவது இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில்தான் லடாக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருக்கும் வீரர்களிடம் நலம் விசாரிக்க இந்திய எல்லைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்கிறார்.