ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்ந்து பாகிஸ்தானுடனே இருக்கிறது: பரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை !
ஜம்மு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்ந்து பாகிஸ்தானிடமே இருக்கிறது. ஜம்மு - காஷ்மீர் தொடர்ந்து இந்தியா வசமே இருக்கும் என்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா.
இது தொடர்பாக ஜம்முவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுடனே நீடிக்கும். ஜம்மு காஷ்மீர் தொடர்ந்து இந்தியா வசமே இருக்கும். ஆக்கிரமிப்பு காஷ்மீரை நம்முடன் வைத்துக்கொள்வது சாத்தியமில்லை. பாகிஸ்தானுடன் மூன்று போர்களில் ஈடுபட்ட போதும், ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற முடியவில்லை.
இதைத்தான் பல ஆண்டுகளாக கூறிவருகிறேன். ஆனால், என்ன செய்தார்கள்? ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக சேர்த்தார்களா? போரினால் அப்பாவி மக்கள் தான் பலியாவர்கள். பேச்சுவார்த்தைதான் தீர்வு என்று கூறினார்..
மேலும் பரூக் அப்துல்லா பேசிகையில், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, என்னிடம் கூறுகையில், நான் பாகிஸ்தான் சென்றிருந்த போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானே வைத்திருக்கட்டும் என யோசனை கூறியதாகவும், ஆனால், இதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். தற்போது இதே கொள்கையை வைத்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், இதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என பரூக் அப்துல்லா தெரிவித்தார்.